இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்

குர்-ஆனில் காணப்படும் இயேசுவின் தனித்துவத்தை மறைக்க முயலுவதற்காக, அனேக முஸ்லிம்கள் பின்வரும் வசனத்தைக் காண்பிக்கின்றனர்:

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். ஸூரத்துல் மாயிதா (5):75

இயேசு தன் மனித தன்மையில், அவர் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளைப் போல ஒரு மனிதனாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், இந்த மாம்ச உடலில் தான் தெய்வீகத் தன்மையை உடைய ”தேவ வார்த்தை” வாசம் பண்ணினார் என்று வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தும் போதனையை நாம் புறந்தள்ள முடியாது. (யோவான்.1:14, " அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"). இயேசுவின் மனித மற்றும் தெய்வீக தன்மையின் இரகசியத்தை நாம் விவரிக்க இயலாது என்றாலும், அது உண்மைதான் என்று வேதாகமம் உறுதி செய்கிறது. குர்-ஆனும் கூட இயேசுவின் மனித மற்றும் தெய்வீகத் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, குர்-ஆனில் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்:

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஸூரத்துல் அன்னிஸா (4):171

அந்நாட்களில் வாழ்ந்து வந்த கள்ள உபதேசக் கிறிஸ்தவர்களின் கூற்றை, அதாவது இயேசு தன் தாயாருடன் கூட மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கிறார் என்பதை மறுப்பதற்காக குர்-ஆன் மேற்கண்டவாறு சொல்லி இருக்கிறது என்றாலும், இயேசுவை ”அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்…அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மாதான்” என்று சொல்வதன் மூலமாக குர்-ஆன் இயேசுவின் தனித்துவத்தையும் தெய்வீக மகிமையையும் பாதுகாத்திருக்கிறது என்பதை கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுப் புத்தகம் இயேசுவை “தேவனுடைய வார்த்தை” (வெளி 19:13) என்று அழைக்கிறது. இந்த வார்த்தையைச் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இறைவனுடைய வார்த்தை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை என்றும் அது மரிக்க முடியாது என்றும் அது நித்திய காலங்காலமாக இருக்கக் கூடியது என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் உடனே ஒத்துக் கொள்வர். அப்படிப்பட்ட வார்த்தை தெய்வீகத் தன்மையுடையதாக மட்டுமே இருக்க முடியும்.

அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா” என்ற சொற்றொடரின் அரபி மூலத்தில் “ரூஹ்-உன் மின் ஹூ (ruh-un min hu)” என்பதாகும். இது குர்-ஆனில் மற்றொரு இடத்திலும் காணப்படுகிறது.

அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். ஸூரத்துல் முஜாதலா (58):22

யூசுப் அலி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட விளக்கவுரையுடன் கூடிய குர்-ஆனில் எண் 5365 எனும் அடிக்குறிப்பு காணப்படுகிறது. அது அவனிடம் இருந்து வந்த ஆன்மா என்பதை தெய்வீக ஆன்மா, மனித மொழியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில் இறைவனின் தன்மை மற்றும் சக்தி என்றுச் சொல்வதே சரியாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது.

மேற்கண்ட குறிப்பில் இருந்து ஸூரத்துல் அன்னிஸா (4):171ல் இயேசுவைக் குறிப்பிட குர்-ஆன் பயன்படுத்துகிற அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா” என்ற சொற்றொடரானது ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலான ஒருவரைப் பற்றிக் கூறுகிறது என்பது தெளிவு!

இயேசுவின் தனித்துவத்தை போதிக்கும் அனேக குர்-ஆன் வசனங்கள் உண்டு. அவைகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. அவை கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன:

1) அற்புத கன்னிபிறப்பு

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். "அவ்வாறேயாகும்; ´இது எனக்கு மிகவும் சுலபமானதே …. என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். ஸூரத்துல் மர்யம் (19):20-21

ஆதாமுக்கு தகப்பன் இல்லாமல் இருந்தது போலவே இயேசுவும் இருக்கிறார், ஆகவே இவ்விசயத்தில் அவர் தனித்துவமானவர் என்று சொல்லக் கூடாது என முஸ்லிம்கள் கூறுகின்றனர். ஆதாமுக்கு மனித தகப்பன் இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அது நாம் எதிர்பார்க்கக் கூடியதே. முதன் முதலாக வந்த மனிதனுக்கு எப்படி இயற்கையான பெற்றோர்கள் இருக்கமுடியும்? ஆனால் இயேசுவைப் பொறுத்த வரையில் அது முற்றிலும் வேறுபட்டதாகும். ஆதாமுக்குப் பின் கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிறந்துள்ளனர், மற்ற தீர்க்கதரிசிகள் எப்படி பிறந்தார்களோ, இதே போல இவர்களில் யாராவது ஒரு பெற்றோர்களுக்கு இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? ஆனால், இயேசுவின் அற்புதமான பிறப்பு மனுக்குலத்துக்கு ஒரு அடையாளமாக தரப்பட்டது. இயேசு பூமியில் உள்ள மனித வித்தில் இருந்து வரவில்லை, மாறாக பரத்தில் உள்ள இறைவனின் தெய்வீக தன்மையில் இருந்து வந்தார் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்பினார்.

2) பரிசுத்தமானதொரு வாழ்க்கையை வாழ்ந்தார்.

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார். ஸூரத்துல் மர்யம் (19):19

இயேசு உண்மையிலேயே ஒரு பரிசுத்த பிள்ளையாக இருந்தார். மனித வித்தில் தோன்றாமல் இறைவனிடத்தில் இருந்து வந்ததினால், அவர் பிறக்கும்போது சாத்தானால் அவரின் வாழ்க்கை தொடப்படவில்லை. உண்மையாகவே, இயேசு தவறு செய்யாத ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். எல்லா தீர்க்கதரிசிகளும் குற்றமற்றவர்களே, ஆகவே இயேசுவுக்கு எவ்வித தனித்தன்மையும் இல்லை என்று அனேக இஸ்லாமியர் வாதிடுவர். ஆனால், நாம் குர்-ஆனைக் கவனமாக ஆராய்ந்தால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்டு கொள்ளலாம். பெரிய தீர்க்கதரிசிகள் கூட இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர் என்பது சான்றாக இருக்கிறது. இயேசுவைப் போலல்லாமல், அவர்கள் எல்லாரும் மற்ற மனிதர்களைப் போல ஆதாமின் வித்தில் இருந்து பிறந்தவர்களே. பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்:

ஆதாம் (மற்றும் ஏவாள்): அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள். ஸூரத்துல் அஃராஃப் (7):23

ஆபிரகாம்: "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். ஸூரத்துஷ் ஷூஹாரா (26):82

மோசே: "என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார் . ஸூரத்துல்-கஸஸ் (28):16

தாவீது: "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். ஸூரத்து ஸாத் (38):24

சாலமோன்: "என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! ஸூரத்து ஸாத் (38):35

யோனா: ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் - (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். ஸூரத்து ஸாஃப்பாஃத் (37):142-144

முஹம்மது:

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். ஸூரத்துல் ஃப்த்ஹ் (48):1-2

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக . ஸூரத்து முஹம்மது (47):19

ஒருவர் குர்-ஆனைக் கவனமாகப் படிப்பார் எனில், இயேசு இறைவனிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் ஒரு இடத்தில் கூடக் காண மாட்டார். இதற்கான காரணம் இப்போது தெளிவாக இருக்கிறது. அவர் பரிசுத்தமானவராக இருந்தார், அவர் குற்றமற்றவராகவும் பரிபூரண பரிசுத்தமானவராகவும் இருந்தார். அவர் இந்த உலகத்தில் இருந்து வந்தவரல்ல, பரத்தில் இருந்து வந்தவர்.

3) பலத்த அற்புதங்களைச் செய்தார்

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;... ஸூரத்தில் ஆல் இம்ரான் (3):49

மாபெரும் அற்புதங்களையும், இறந்தோரை உயிர்ப்பித்தலை மட்டும் இயேசு செய்யவில்லை, அவருக்கு முன்பு அல்லது பின்னர் வந்த தீர்க்கதரிசிகளைப் போலல்லாமல், ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி, அதில் ஊதி, அதை உயிருள்ளதாக மாற்றினார் என குர்-ஆன் கூறுகிறது.

4) இறைவனிடம் திரும்பிச் சென்றார்

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். ஸூரத்துல் ஆல் இம்ரான் (3):55

மரித்து மண்ணுக்குத் திரும்பிய மற்ற தீர்க்கதரிசிகளைப் போல அல்லாமல், இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு அல்லாமல், இறைவன் தன்னளவில் உயர்த்தி கொள்ளப்பட்ட நிலைக்குச் சென்றார் என்பது மிகவும் முக்கியமானதாகும். வேறெந்த தீர்க்கதரிசிக்கும் இப்படிப்பட்ட மேன்மையை குர்-ஆன் கொடுக்கவில்லை. இயேசு பரத்திலிருந்து, இறைவனிடத்தில் இருந்து வந்தபடியால், அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்றார் என்று குர்-ஆனின் படி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

5) இந்த உலகத்திற்கு திரும்பவும் வருவார்

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார். ஸூரத்து அஸ்ஸுக்ருஃப்- (43):61

பரலோகத்தில் இருந்து இயேசு திரும்பிவருவதைக் குறித்து குர்-ஆன் விளக்கமாகக் கூறவில்லை என்றாலும் கூட, கடைசி நாட்களில் சாத்தானின் சேனையைத் தோற்கடித்து, உலகளாவிய அமைதியை உண்டாக்க இயேசு திரும்ப வருவார் எனும் இஸ்லாமிய பாரம்பரிய நம்பிக்கைக்கு ஆதரவாக இந்த வசனத்தை அனேக முஸ்லீம் அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வசனத்துக்கான அடிக்குறிப்பாக யூசுப் அலி அவர்கள் தன் குர்-ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: இது உயிர்த்தெழுதலுக்கு முன் இயேசு வந்தது போல கடைசி நாட்களில் அவரின் இரண்டாவது வருகையைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், ஆதாமின் வழியில் தோன்றாமல் அற்புதமாகப் பிறந்தவரும், பாவமற்ற பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்தவரும், அனேக அற்புதங்களையும் சிருஷ்டிப்பையும் கூடச் செய்தவரும், உயர்த்தப்பட்டு இறைவனிடம் அவருக்குச் சமமாக இருக்கிறவரும் மற்றும் உலகளாவிய அமைதிக்கு வழிவகுக்க திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறவரே இயேசு என மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எந்த மதப் புத்தகத்திலும் வேறெந்த தீர்க்கதரிசியைப் பற்றியும் இப்படிப்பட்ட குறிப்பு கிடையாது. சில இஸ்லாமியர்கள் சொல்வதைப் போலல்லாமல், இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல என்று குர்-ஆன் மிகவும் உரக்கக் கூறுகிறது!!!

ஆங்கில மூலம்: The Claim that Jesus was no more than a Prophet

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்