இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்

What Jesus Said About Himself

தம்முடைய செய்தி தேவனிடமிருந்து வந்தது என்றும் மற்றும் அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்து பார்க்கமுடியும் என்றும் இயேசு கூறினார்:

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். (யோவான் 7:16-17)

இயேசு தம்முடைய செய்தி நித்திய நித்தியமானது என்றும், அது மாறாதது என்றும் கூறினார்:

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மத்தேயு 24:35)

இயேசு பரலோகத்திலிருந்து (மேலிருந்து) இந்த உலகில் வந்தார் என்று கூறினார்:

அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37)

இயேசு பரலோகத்திலிருந்து, தேவனிடமிருந்து இந்த உலகில் வந்தார் என்று கூறினார்:

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)

தேவன் எப்போதும் இடைவிடாமல் தம்மோடு இருப்பதாக கூறினார்:

என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். (யோவான் 8:29)

பரலோக பிதாவின் சித்தம் செய்து, அவரை கனப்படுத்துவதே தம்முடைய ஊழியமாக உள்ளது, இது தான் எப்போதும் தம்முடைய மனதில் இருக்கும் ஆர்வம் என்று கூறினார்.

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)

நாம் ஏன் இயேசுவை விசுவாசிக்கவேண்டும் (நம்பவேண்டும்)?

என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:46)

இறைவனின் எல்லா தீர்க்கதரிசிகளும் பாவமற்றவர்கள் என்று இஸ்லாமியர்கள் சிலவேளைகளில் கூறுவார்கள். ஆனால், இது உண்மையல்ல.

  • இயேசு மட்டுமே பாவமில்லாத பரிசுத்தராக இருக்கிறார் (குர்‍ஆன் 19:19).
  • நாம் ஆதாமின் பாவம் பற்றி குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 7:22,23),
  • மோசேயின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 28:15,16),
  • ஆபிரகாமின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 26:82),
  • யோனாவின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 37:141-144),
  • தாவீது செய்த பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 38:24,25),
  • கடைசியாக முஹம்மதுவின் பாவங்கள் பற்றியும் அதே குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 40:55, 47:19, 48:1,2).


நாம் இறைவன் சொல்வதின் படி செய்யவேண்டுமென்றால், முதலாவது இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:29)

நீங்கள் இயேசுவை புறக்கணித்தால், இறைவனை புறக்கணிப்பதற்கு சமம்.

"...என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்." (லூக்கா 10:16)

இயேசு ஒரு நற்செய்தியை மட்டும் கொண்டுவரவில்லை, அவர் ஒரு "வேலையை" செய்துமுடிக்க வந்தார்.

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். (லூக்கா 19:10)

பாவிகள் மனந்திரும்பவேண்டும் என்று அவர்களை அழைக்க வந்தார். அவர்களை ந‌ரகத்திலிருந்து காப்பாற்ற இயேசு வந்தார். இறைவனின் இடத்திற்கு நான் செல்வதற்கு எனக்கு தேவையான நீதி, பரிசுத்தம் எனக்கு உள்ளது என்று நினைக்கும் மனிதன், தனக்கு இயேசு தேவையில்லை என்று நினைக்கிறான்.

இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17)

சோர்ந்துபோய், பாடுபடும் மனிதர்களுக்கு இயேசு ஒரு சகோதரனாவார். கலங்கும் இதயத்திற்கு அமைதியை கொடுக்க இயேசு விரும்புகிறார்.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:28-30)

நாம் உயிர் வாழ தண்ணீர் அவசியம். ஆன்மீக முறையில் சொல்லவேண்டுமென்றால், இயேசு "ஜீவத் தண்ணீரைத் தருகிறார்", இதனால் நம்முடைய தேவை பூர்த்தியாவதோடு மட்டுமல்லாமல், நம்மிலிருந்து ஜீவ ஊற்று புறப்படும், அதனை மற்றவர்கள் பருகி பயனடையவும் அவர் உதவி செய்கிறார்.

". . .ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்". (யோவான் 7:37-38)

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். (யோவான் 4:14)

நாம் தேவனை நேசிக்கிறோம் என்பதை இயேசு மீது நம்பிக்கை வைப்பதின் மூலமாக நிருபித்துக் காட்டவேண்டும்.

உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். (யோவான் 5:42-43)

(இயேசு வாழ்ந்த காலகட்டத்தின் வழக்கப்படி, தம்மைப் பற்றி கூறும் போது படர்க்கையில் குறிப்பிடுகிறார்). இங்கு இயேசு தம்மைப் பற்றி மிகவும் முக்கியமாக மற்றும் சிறப்பான விவரத்தை கூறுகிறார்

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். (யோவான் 3:18-21)

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46)

இயேசு அனேக முறை உவமைகளாக பேசினார். இந்த வசனங்களில் அவர் தன்னை ஒரு "வாசல்" என்றும், தானே "ஒரு மேய்ப்பன்" என்றும் கூறுகிறார், மற்றும் தன்னை பின்பற்றுபவர்கள் "ஆடுகள்" என்றும் கூறுகிறார்

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:9-10)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11)

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10:14-15)

தம்முடைய சுயசித்தம் மற்றும் அதிகாரத்தின் படி தாம் தம்முடைய உயிரை கொடுக்கிறார் என்பதை இங்கு தெளிவாக இயேசு கூறுகிறார்.

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)

இயேசு "முழு ஜீவனை" அல்லது "பரிபூரண ஜீவனை" தருகிறார், இது இந்த உலகத்திலும், வரப்போகிற உலகிலும் நமக்கு நம்பிக்கையை தருகிறது.

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. (யோவான் 10:27-28)

ஒரு பெண்ணின் சகோதரன் மரித்து கல்லரையில் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது, அவனை இயேசு உயிரோடு எழுப்பினார். இந்த நேரத்தில் இயேசு கூறியவைகள்:

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 10:25-26)

இயேசு தாம் மட்டுமே நித்திய ஜீவனையும், இரட்சிப்பையும் தரமுடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)

சில ஆன்மீக காரியங்களை விவரிப்பதற்கு இயேசு உவமைகளை பயன்படுத்தினார். இந்த உவமைகளில் ஒரு உவமை மிகவும் ஆழமானது. இந்த உவமையில் இயேசு, தான் எங்கே இருந்து வந்தார் என்பதையும், தாம் வந்ததற்கான காரணம் என்னவென்பதையும் கூறுகிறார்:

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். (யோவான் 6:33)

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35)

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. (யோவான் 6:37-39)

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63)

இயேசு இங்கு தாம் சொல்லவந்த விஷயத்தை நச்சென்று ஒளிவு மறைவின்றி கூறுகிறார்:

இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42)

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். (யோவான் 6:23-24)

தம்முடைய மரணத்திற்கு முன்பு, தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் இயேசு கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:

நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவான் 16:28)

தன்னை பின்பற்றுபவர்கள் தன்னுடைய தெய்வீகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் படி இயேசு கூறுகிறார், மற்றும் அதற்கான ஆதாரத்தையும் அவர் காட்டுகிறார்.

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)

ஒரு குறிப்பிட்ட ஜெபத்தில் இயேசு தம்முடைய பிதாவிடம் தமக்கு இருக்கும் உரிமையை கூறுகிறார், மற்றும் தாம் நித்திய நித்திய காலமாக இருப்பதாக இயேசு கூறுகிறார்.

பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)

இவ்வுலகில் இயேசுவிற்கு ஒரு மனித தாய் இருந்ததினால், அவரும் ஒரு மனிதனாகவே காணப்பட்டார். நமக்கு எப்படியோ அப்படியே அவருக்கும், பசி, தாகம், சோர்வு, ஜெபிக்க வேண்டும் என்ற ஆர்வம், வலி வேதனை என்று எல்லாமே இருந்தது. இயேசுவின் பிறப்பில் மனித தந்தையின் அவசியமில்லாததால், அவர் ஒரு தெய்வீகமானவராகவும், சுகப்படுத்துகிறவராகவும், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறவராகவும் இருந்தார், மற்றும் தண்ணீரின் மீது நடப்பவராகவும், பாவங்களை மன்னிக்கின்றவராகவும், காற்றையும் கடலையும் அதட்டி அமைதிபடுத்துகின்றவராகவும், இன்னும் அனேக அற்புதங்கள் செய்கின்றவராகவும் இருந்தார். ஆகவே, இப்படிப்பட்டவர் நட்புறவு கொள்கிறேன் என்று எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். (லூக்கா 22:70)

இவர் மூலமாக மட்டுமே நமக்கு பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும். மட்டுமல்ல, மரண பயத்திலிருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும் நமக்கு விடுதலை இவர் மூலமாக மட்டுமே கிடைக்கும்.

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36)

ஒருமுறை தம்மைப் பற்றி இயேசு மிகவும் ஆச்சரிப்படும்விதத்தில் கூறினார். அவர் என்ன கூறுகிறார் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடியுமா? ஆனால், அன்று அவருடைய கூற்றை கேட்டவர்களுக்கு நிச்சயமாக அவர் சொன்னது புரிந்தது.

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58)

இங்கு குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எபிரேய மொழியில் "நான் (I am)" என்பது "யேகோவா" விற்கு கொடுக்கப்பட்ட பெயராகும். இது பைபிளின் தேவன் தனக்குள்ள பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இயேசு தன்னை "நான் (I am)" என்று சொன்னதினால், யூதர்கள் அவரை கொலை செய்ய முயற்சி எடுத்தனர். இந்த இடத்தில் இன்னும் ஒரு முக்கியமான விளக்கத்தைக் காண்கிறோம். தேவன் நித்தியமானவராக இருப்பதினால், அவருக்கு "இருந்தார் (was)", "இருப்பார் (will be)" என்றுச் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக அவர் "இருக்கிறார் (is)" என்றுச் சொல்லவேண்டும். இயேசு முக்கியமாக என்ன கூறினார் என்று பார்த்தால், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பாக நான் இருக்கிறேன், அப்படியானால், நான் எப்போதும் வாழ்கின்றவனாக இருக்கிறேன்" என்று அர்த்தம்.

இயேசு மட்டும் பரலோகில் தனிமையாக இருக்க விரும்பவில்லை, உங்களையும் என்னையும் அவர் நேசிக்கிறார். அவரது அன்பிற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? நாம் அவரது அன்பிற்கு பதில் தரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

"பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்;. . ." (யோவான் 15:9)

இயேசு நம்மீது வைத்த அன்பு வெறும் வெத்து வார்த்தைகள் அல்ல, அந்த தெய்வீக அன்பை அவர் நிருபித்தும் உள்ளார்.

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15:13)

அனேக முறை இயேசு தம்முடைய மரணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார், மற்றும் தம்முடைய மரணத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)

தற்காலத்தில் நாம் "பிணைப்பணம்" என்பதை அபூர்வமாக பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் செய்திகளில் படிப்பது போல, கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் அல்லது பணக்காரர்களிடம் "பிணைப்பணத்தை" கேட்கிறார்கள். ஒரு பிணைக் கைதியை விடுவிக்க கொடுக்கப்படும் பணம் தான் பிணைப்பணம் எனப்படுகிறது. பாவத்தின் பிடியில் சிக்கிய நம்மை விடுதலைச் செய்ய இயேசு ஒரு விலையை செலுத்தியுள்ளார். இயேசு தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் தாம் மரிக்கப்போவதாக நான்கு முறை கூறினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் சொன்னதை சீடர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை.

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.

அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். (மாற்கு 10:33,34)

தம்முடைய மரணத்திற்கு முன்பாக, இயேசு ஜெபத்தில் தரிந்திருந்தார், அந்த சிலுவையில் அறையப்படுத்தலின் வலியை அவர் முன்னதாகவே தாங்கினார்.

அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:42)

இயேசுவை கைது செய்தவர்கள், இறை நம்பிக்கையற்ற கூட்டமல்ல. இவர்கள் மார்க்க விஷயங்களில் மிகவும் ஆழமாக கற்றுத்தேர்ந்தவர்கள், அக்காலத்தின் மார்க்க அறிஞர்களாக இருந்தவர்கள், தங்களுடைய மார்க்க அதிகாரம் எங்கே பறிபோய்விடுமோ என்று பயந்து அவர்கள் இயேசுவை கைது செய்தார்கள். இயேசுவை கைது செய்யும் நேரத்தில், இயேசுவின் ஒரு சீடன், கத்தியை எடுத்து அதன் மூலம் சண்டையிடவும், எதிர்க்கவும் முற்பட்டான். ஆனால், இயேசு அவனிடம் இவ்விதமாக கூறினார்:

நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். (மத்தேயு 26:53,54)

"தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டியது" என்பதை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், இயேசுவின் வாழ்வில் நிகழவேண்டிய பல நிகழ்ச்சிகள் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைத்தவைகளை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இயேசுவின் தெய்வீகத்தன்மை, அவர் நித்திய நித்தியமாக இருப்பவர் என்றும், அவரது அற்புதமான கன்னிப் பிறப்பு பற்றியும், அவரது சிலுவை பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். இயேசுவின் வாழ்வில் அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவேறியது.

இன்று அனேக மக்களுக்கு இயேசுவின் செய்திகள் கலங்கப்படுத்துவதுபோல, அக்காலத்தில் யூதர்களையும் அது கலங்கப்படுத்தியது.

அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:31-33)

தம்முடைய வாழ்வின் மிகவும் பயங்கரமான நேரத்திலும் இயேசு தமக்காக அல்ல, பிறருக்காக சிந்தித்தார்:

கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:33,34)

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, தம்முடைய ஒரு சில சீடர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களுடன் இவரும் சென்றார். ஆனால், அவர்களோ ஆரம்பத்தில் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. இயேசு மரித்துவிட்டார் என்பதினால் அவர்கள் அதிக துக்கத்தில் இருந்தார்கள். அவர்களிடம் இயேசு இவ்விதமாக கூறினார்:

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:25-27)

பழைய ஏற்பாட்டில் தம்மைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்.

ஒருசிலர் இப்படியாக யூகிக்கிறார்கள், அதாவது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, அவர் சுயநினைவு இழந்து இருக்கும் நிலையில், அவரை சிலுவையிலிருந்து இறக்கி, மறுபடியும் அவரது காயங்களை சுகப்படுத்தினார்கள் என்று கற்பனையாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக முடியாத செயலாகும். ஏனென்றால், போர்ச்சேவகர்கள் அவர் மரித்துவிட்டாரா என்பதை சோதித்துப் பார்த்தார்கள், அவரது விலாவில் குத்தினார்கள், அதன்பிறகு தான் இறக்கினார்கள் (யோவான் 19:33). இதற்கு இயேசு சொல்லும் பதில் என்ன?

நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 1:17,18)

ஒரு சிலர் கூறுவது போல,இயேசு யூதர்களுக்காக மட்டும் வரவில்லை. அவர் இதைப் பற்றி கூறும் போது:

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக்கா 24:46,47)

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு 39 நாட்கள் கழித்து, அவரது சீடர்களின் கண்கள் காண அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தம்முடைய சீடர்களிடம் அவர் பேசிய கடைசி வார்த்தைகள் இவைகள்:

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:18-20)

இதற்காகத் தான் கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் உலகம் அறிய விரும்புகின்றனர். உலகத்தின் முடிவு வரும் போது, இயேசு ஒரு நியாயாதிபதியாக வருவார்.

பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; (யோவான் 5:21-28)

வேறு எதுவும் நம்மை சிந்திக்க வைக்கவில்லையானாலும், இது நம்மை சிந்திக்க வைக்கும். பல்வேறு வகையான பயத்தினால் அவர் தரும் பரிசை பெற நாம் தாமதிப்போமானால், அது வெறும் மூடத்தனமாகும்.

தம்மீது நம்பிக்கை வைக்கும்படி இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார் மற்றும் நமக்காக அவர் என்ன செய்து இருக்கிறார் என்பதை கண்டாவது நம்பிக்கை வைக்கும் படி உற்சாகப்படுத்துகிறார்.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14:1-3)

இயேசு மறுபடியும் வருவார். இந்த முறை அவர் இரட்சிப்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக தம்முடைய விலை மதிக்கமுடியாத பரிசாகிய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயந்தீர்க்க வருவார். ஆகையால், அவர் வருவதற்கு முன்பாக நாம் தயாராக இருக்கவேண்டும்:

அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். (லூக்கா 12:40)

இது எப்படி நடக்கும் என்பதை முன்னமே நமக்கு அவர் கூறியுள்ளார்:

அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:62)

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (மாத்தேயு 24:27)

இயேசு மறுபடியும் இவ்வுலகிற்கு வரப்போகிறார், உலகத்தின் எல்லா நாடுகளின் மக்களை நியாயந்தீர்க்க வரப்போகிறார். ஆனால், அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பு நாம் மரிக்க நேரிடலாம், ஒருவேளை நாம் மரித்தால், அந்த நேரத்தில் அவர் நம்மை சந்திப்பார்.

இயேசு தம்மைப் பற்றி கூறும்போது ஏன் "தேவகுமாரன்" என்றுச் சொல்லாமல், அதற்கு பதிலாக "மனுஷ குமாரன்" என்றுச் சொன்னார்? "மனுஷ குமாரன்" என்ற பட்டப்பெயர் கி.மு. 555ல் பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.

இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். (தானியேல் 7:13-14)

இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் பார்த்தோமானால், "மனுஷ குமாரன்" மற்றும் "தேவ குமாரன்" போன்றவைகளுக்கு இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காணலாம்.

இயேசுவிடமிருந்து மன்னிப்பைப் பெறும் நேரம் இன்னும் முடிந்துவிடவில்லை. இயேசு இன்று கூட காத்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கீழ்கண்ட வரவேற்ப்பை கொடுத்துவிட்டு அவர் சென்றுள்ளார்கள்.

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

ஆங்கில மூலம்: What Jesus Said About Himself

 "ஒரு தூது"  இதர கட்டுரைகள்