இயேசுவின் வரலாறு - 3 மறுப்புக் கட்டுரை - 3

தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன" என்ற தொடர் கட்டுரையின் இரண்டு பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் மூன்றாவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.

இயேசுவின் வரலாறு தொடர் - 1 ன் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம். 

இயேசுவின் வரலாறு தொடர் - 2ன் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம்.

நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3 ஐ இங்கு கணலாம்.


நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3ன் மறுப்பு

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.

இஸ்லாமியர்களின் வேதமாகிய குர்-ஆனில் சொல்லப்பட்ட சில செய்திகள், பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்றுச் சொல்லலாம். அந்த செய்திகளை குர்-ஆன் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று தமிழ்முஸ்லீம்  தளத்தில் நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதும் போது, பைபிளைப் பற்றியும் எழுதுகிறார். இங்கு நாம் அவரின் மூன்றாவது தொடருக்கான மறுப்பை காண்போம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

தொடர் - 3

யூத சமுகத்தின் கொடிய மனப்பான்மை - மரியாள் தாயாரின் மனநிலை - மரியாளின் பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றை முந்தய இரு தொடர்களில் கண்டோம்.

அற்புதங்கள் நிறைந்த ஒரு தூதரை யூதர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு படிப்படியாக இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நடக்க துவங்கி விட்டதை ஜகரிய்யா மற்றும் மரியாளின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாம் விளங்கலாம். 

உமர்:

குர்-ஆனின் படி இயேசுவின் வருகையின் ஆயத்தங்கள் இரண்டு தலைமுறையாக தான், ஆனால் பைபிளின் படி, மனித சமுதாயம் ஆரம்பமான ஆதாம், ஏவாள் தலைமுறையிலிருந்தே ஆரம்பித்தது. சாத்தான் ( இப்லீஸ் ) என்று ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து அவர்களை தேவ கட்டளைக்கு கீழ்படியாதவர்களாக மாற்றினானோ, அன்றைக்கே இயேசுவின் வருகை முன்குறிக்கப்பட்டது.

ஆதியாகமம்: 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து, நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்;

ஆதியாகமம்: 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

  • சாத்தானின் தலையை நசுக்கும் "அவர்" யார் ? 
  • சாத்தான் ஏன் "அவர்" குதிக்காலை மட்டும் நசுக்குவான்? 

சாத்தானை விட பெரியவரோ அவர். ஆம், அவர் தான் இயேசுக்கிறிஸ்து.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

மரியாளை மனோதத்துவ ரீதியில் உருவாக்குவதற்காக அவரை ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்டதை கூறி இரண்டாம் தொடரை முடித்திருந்தோம்.

மரியாளை மனோதத்துவ முறையில் உருவாக்க வேண்டிய அவசியம்.

குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உடலுக்கு தேவையான பாலியல் வேட்கைகள் அதை தணித்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் - தேடல்கள் இவை மனித சமுதாயத்திற்கு பொதுவானது தான் என்றாலும் குழந்தைகள் வளரும் - வளர்க்கப்படும் சூழ்நிலையை பொருத்து இந்த இயல்புடைய தாக்கங்களில் வித்தியாசம் ஏற்படத்தான் செய்யும்.

கட்டுக் கோப்பான சூழ்நிலையில் (கட்டுக் கோப்பான சூழ்நிலை என்பது அடக்குமுறையான சூழ்நிலை என்று யாரும் புரிந்துக் கொள்ளக் கூடாது) வளரும் குழந்தைகள் ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் அவர்களிடம் ஒழுக்கங்கள் மிகைத்தே காணப்படும். எந்த ஒரு தவறையும் செய்வதற்கு உள்ளம் இடங் கொடுக்காது. மானக்கேடான காரியங்களை செய்வதற்கு உள்ளமும் - உடலும் கூசும்.

மரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்றால் வளரும் விதம் பற்றி சொல்லி தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா... மனம் இடங்கொடுக்குமா... 

உமர்:

மரியாள் ஜகரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது வெறும் கற்பனை என்பதை நாம் முந்தைய மறுப்பில் பார்த்தோம்.

மரியாளை ஒப்படைப்பது பற்றி முடிவு எடுக்க "வில் எறிந்து" தெரிந்துக்கொண்டார்கள் என்று குர்-ஆன் சொல்வது உண்மையல்ல என்பதும், "வில் எறிந்து" முடிவு எடுப்பது மக்காவிலுள்ள மக்களின் வழக்கமென்றும் நாம் கண்டோம்.

யூதர்களின் வழக்கம் "ஊரிம், தும்மீம்" போட்டுப்பார்ப்பது தான் என்பதை நாம் ஆதாரங்களோடு பார்த்தோம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

கணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

இந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார்.

மரியாள் ஜகரிய்யா அவர்களிடம் வளரும் போது தள்ளாத வயதை அடைந்த நிலையிலும் ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு குறையவில்லை. இந்நிலையில் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் கிடைப்பதையும் அது இறைவன் புறத்திலிருந்து வருகிறது என்பதையும் ஜகரிய்யா அறிந்து தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற முறையீட்டை இறைவனிடம் வைக்கிறார்.

இறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள்! நீ வேண்டுதலை செவியேற்;பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)

அவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)

எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும்? என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)

இந்த விபரங்கள் மேலதிக வார்த்தைகளுடன் மரியாள் என்ற 19வது அத்தியாயத்திலும் கூறப்படுகிறது.

ஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார்

என் இறைவனே! என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை.

எனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.

ஜகரிய்யாவே! உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன். 

உமர்:

நாம் முந்தைய மறுப்பில், குர்-ஆன் எவ்வளவு பெரிய தவறு யோவான் ஸ்நானகன் விஷயத்தில் செய்துள்ளது என்பதை சுருக்கமாக கண்டோம்.

இப்பெயர் கொண்டவன் ஜகரியா வம்சத்தில் யாரும் இல்லை என்பதை தவறாக புரிந்துக்கொண்டு, உலகத்திலேயே யாரும் இப்பெயரில் இல்லை என்று சொல்லிவிட்டார் அல்லா (அ) முகமது. 

யோவானுக்கு முன்பு இப்பெயர் கொண்டவர்களின் பட்டியல்:

a) பைபிளில் யோவான்:

இந்தப் பெயர் "யோகனான்" என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)

2 இராஜா 25:23. பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

2 Kings 25:23 When all the army officers and their men heard that the king of Babylon had appointed Gedaliah as governor, they came to Gedaliah at Mizpah—Ishmael son of Nethaniah, Johanan son of Kareah, Seraiah son of Tanhumeth the Netophathite, Jaazaniah the son of the Maacathite, and their men

b) சரித்திரத்தில் யோவான்:

1) ஜான் ஹிர்கானஸ்: 

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரசனாவான். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு: கி.மு. 104.

மேலும் விவரங்களுக்கு: பார்க்க விக்கிபீடியா ஜான் ஹிர்கானஸ்: John Hyrcanus & John Hyrcanus from Britannica Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன்: 

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர்.

பார்க்க விக்கிபீடியா: "ஜான்" எஸ்ஸனெஸ்: John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1 : 

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது.

பார்க்க: 1 மக்காபீஸ் 2:1, 1 மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்-ஆனில் காணப்படும் பல சரித்திர முரண்பாடுகளில் இதுவும் ஒன்று. 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்! நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனiவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.

அது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.

எனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா! என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன் 19: 2 - 10)

உமர்:

குர்-ஆன் படி ஜகரியா 3 நாட்கள் பேசாமல் இருந்தார். ஆனால் பைபிள் சொல்கிறது பிள்ளை பிறக்கும் வரை அவர் பேசவில்லை என்று. தன்னால் முடிந்தவரை முகமது பைபிளின் நிகழ்ச்சிகளை மாற்றிச் சொல்லியுள்ளார்.

பார்க்க லூக்கா 1:59-64

59. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.

60. அப்பொழுது அதின் தாய், அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.

61. அதற்கு அவர்கள், உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,

62. அதின் தப்பனை நோக்கி, இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.

63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான். 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

மரியாளுக்கு ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்குறிய பாடமாக ஜகரிய்யா வாழ்வின் சம்பவங்கள் நிகழ்கின்றன.

முதுமையின் எல்லையை அவரும் - பிள்ளைப் பேறு அற்ற மலட்டு நிலையில் மாதவிடாயின் நம்பிக்கையெல்லாம் இழந்து விட்டு நிற்கும் நிலையில் அவர் மனைவியும் வாழும் நிலையை மரியாள் மிக நன்றாக அறிந்துள்ள நிலையில் ஜகரிய்யாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

இது எப்படி சாத்தியம்?குழந்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஆண் பெண் (கணவன் - மனைவி) மட்டும் இருந்தால் போதாது. ஆணிடம் வீரியமான இரத்த ஓட்டமும் - வாலிபத்தன்மையும், பெண்ணிடம் மாதவிலக்குக்குட்பட்ட வயதும் இருக்க வேண்டும்.

ஆணுக்கு எலும்புகளெல்லாம் தளர்ந்துப் போன நிலையில் - பெண்ணுக்கு மாதவிடாய் அற்றுப் போன நிலையில் குழந்தைப் பேறு என்பது சாத்தியமா... என்ற இயற்கையான சிந்தனையோட்டம் மரியாளுக்கும் இருந்திருக்கத்தான் செய்யும்.

ஏனெனில் இதே வாதத்தை ஜகரிய்யா அவர்களும் முன் வைக்கிறார்கள். தன் நிலையை தெளிவாக உணர்ந்த ஜகரிய்யா அவர்கள் 'இது எப்படி சாத்தியமாகும்' என்கிறார்கள். உன் நிலையிலிருந்து பார்த்தால் இது சாத்தியமற்றதாக தோன்றும் ஆனால் எனக்கு இது மிக எளிதானது' என்று இறைவன் பதில் கூறி விடுகிறான்.

இயற்கையை கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கு அடங்கி இருந்தன.

உமர்:

மரியாள் ஜகரியாவின் வீட்டில் வளரவில்லை என்பதை, இது வரை நாம் பார்த்துவந்த குர்-ஆனின் தவறுகளே சான்றுகள்.

யூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு பிறப்புப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நாங்கள் ஆபிரகாமின் குமாரர்கள் என்றுச் சொல்லிக்கொள்ள யூதர்கள் மிகவும் பெருமைப்பட்டனர். 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

இறைவனுக்கும் - ஜகரிய்யாவிற்கும் நடந்த உரையாடல் தன் இயலாமையை அவர் வெளிபடுத்திய விதம். தன்னால் முடியாது எதுவுமில்லை என்ற இறைவாக்கின் உண்மை. சொல்லி வைத்தது போன்று 'யஹ்யா' என்ற பெயர் கொண்ட குழந்தையின் பிறப்பு. அந்த தருணங்களில் மூன்று நாட்கள் ஜகரிய்யாவால் வாய் பேச முடியாமல் போய்விட்ட அடையாளம் இப்படியாக நிறைய பாடங்களை மரியாள் பெறுகிறார்.

இது ஒருநாள் - இரண்டு நாளில் முடியும் சம்பவமல்ல. வருடத்தை தொடும் அளவிற்கு இதே சூழல் அந்த வீட்டில் - மரியாள் வளரும் ஜகரிய்யாவின் வீட்டில் - நிலைப்பெறுகிறது. இயல்புக்கு மாற்றமான ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் மாத கணக்கில் வாழும் ஒருவருக்கு உளவியல் ரீதியாக தாக்கங்கள் - மாற்றங்கள் ஏற்படவே செய்யும். இந்த உளவியல் ரீதியான மாற்றம் மரியாளுக்கு மிக தேவையாக இருந்தது. அவருக்கு நிகழப்பபோகும் ஒரு காரியத்தில் அவர் நிலை கொள்ள - உளவியல் ரீதியாக அதை எதிர்கொள்ள இந்த பாடமும் காலகட்டமும் அவசியம் தான் என்பதை சிந்திக்கும் எந்த மனமும் ஒப்புக் கொள்ளும்.

குழந்தை உருவாக வேண்டுமானால் கணவனும் - மனைவியும் வாலிபத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை. ஆனாலும் இறைவன் நாடினால் எந்த இயற்iயையும் கடந்து அவன் நாடுவது நடக்கும் என்ற மன பக்குவத்தைப் பெற்ற நிலையில் தான் இயேசு பற்றிய நன்மாராயத்தை மரியாள் பெறுகிறார்.

மரியம் (மரியாள்) என்பது திருக்குர்ஆனின் 19வது அத்தியாயப் பெயர்.

மரியாள் பற்றிய இயேசு பற்றிய வரலாறுகள் - இயேசுவிற்கு பின்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் இந்த அத்தியாயத்திலும் குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

நர் மேலே எடுத்துக் காட்டிய ஜகரிய்யா அவர்களின் பிரார்த்தனை இந்த மரியம் என்ற அத்தியாயத்தில் தான் கூறப்பட்டுள்ளது. அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறப்பதை தொடர்ந்து மரியாளின் வரலாறு விவரிக்கப்படுகிறது

உமர்:

மரியாளுக்கு மனோதத்துவ திடன் தேவை தானா?

மரியாள் "மனதிடன்" பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம், ஏற்கனவே யோசேப்புடன் கூட மரியாளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தேவ துதன் மூலமாக செய்தி அறிந்து, பரிசுத்த ஆவியின் முலமாக கர்ப்பம் தரிக்கிறாள். ஊர் மக்கள் இவ்விசயம் அறியுமுன்னே யோசேப்பு அறிந்து, இரகசியமாக தள்ளிவிட நினைக்கும்போது, பிரச்சனையை தீர்க்க மறுபடியும் தேவதூதன் மூலமாக யோசேப்பின் சந்தேகம் தீருகிறது.

ஊர் மக்களுக்கு தெரியாமல் யோசேப்பிற்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று கேட்கலாம்? 

இதற்கு பதில் மிக சுலபமானது. ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தவுடன், அதன் பிறகு திருமணம் ஆகும் வரை இருவர் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் மற்றவர் வீட்டிற்கு தெரிவது மிகவும் சுலபமாகிவிடும். எனவே, யோசேப்பிற்கு இவ்விவரம் தெரிவதற்கு மற்றவர்களை விட வாய்ப்புக்கள் அதிகம்.

மரியாளை திருமணம் செய்துக்கொண்டதினால் உலகத்தின் பார்வையில் மரியாளின் கர்ப்பமானது சாதாரண விஷயமாக மாறுகிறது.

ஏன் யோசெப்பு இரகசியமாக மரியாளை தள்ளிவிட நினைத்தார்? 

இப்படி கணவன் இல்லாமல் கர்ப்பமாகும் பெண்கள் கல்லெரிந்து கொள்ளப்படுவார்கள். இதை யோசேப்பு பல முறை பார்த்துகூட இருக்கலாம். இவர் நீதிமானாக இருப்பதினால், இரகசியமாக தள்ளிவிட நினைத்தார்.

தேவன் மரியாளை மட்டும் தெரிந்தெடுக்கவில்லை, யோசேப்பையும் தெரிந்துக்கொண்டார். தேவனின் தெரிந்தெடுப்பில் எப்போதும் பிழையிருந்ததில்லை.

யேசுவைன் பிறப்பின் விவரங்கள் இரகசியமாக நடைபெறுவதினால் தான், இது ஒரு பிரச்சனையாக மாறவில்லை. மட்டுமில்லை, பைபிளில் சொல்லப்பட்ட இச்செய்திகளே நடைமுறைக்கு ஏற்றார்ப்போல் இருக்கிறதே தவிர குர்-ஆனில் சொல்லப்பட்டது இல்லை.

எனவே, கணவனும், மனைவியும் தேவதூதர்களால் சந்திக்கப்பட்டதால், யோசேப்பின் சந்தேகங்கள் நீக்கப்பட்டதால், இருவரும் ஒரு சந்தோஷமாக வாழ்வை வாழ்ந்துயிருப்பார்கள். பரிசுத்த பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி மரியாளும், தேவனால் உத்தமி என்று சாட்சி கொடுக்கப்பட்ட மனைவியுடன் யோசேப்பும் மிக மிக பெருமையுடைய பெற்றோர்களாக வாழ்ந்திருப்பார்கள். இயேசு பிறக்கும்வரைக்கும் இவர்கள் இருவரும் கூடவில்லை என்று பைபிள் சொல்கிறது.

மரியாளை மனோதத்துவ முறையில் தயார் படுத்தவேண்டிய அவசியம் எங்கே உள்ளது. அது தேவையில்லை என்பது இப்போது புரியும். 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

(முஹம்மதாகிய இறைத்தூதரே!) இந்த வேதத்தில் கூறப்படும் மரியமைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக.தமது குடும்பத்தை விட்டும் கிழக்கு திசையில் உள்ள ஒரு இடத்தில் அவர் தனித்து ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அப்போது அவரிடத்தில் நமது ரூஹை - ஆன்மாவை அனுப்பினோம் - அவர் முழுமையான மனிதராக மரியாளுக்கு தோற்றமளித்தார். (அல் குர்ஆன் 19: 16 - 17)

(அவரைக் கண்டதும் மரியாள்) நீர் இறைவனுக்கு அஞ்சக் கூடியவராக இருந்தால் உம்மைவிட்டும் அந்த (இறைவனாகிய) அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றுக் கூறினார் (அல் குர்ஆன் 19:18)

(பயப்படவேண்டாம்) நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட (வானுலக) தூதன். உமக்கு பரிசுத்தமான ஒரு புதல்வன் பற்றிய அன்பளிப்பு (செய்தியை) தறுவதற்காக வந்துள்ளேன் என்றார் (அல் குர்ஆன் 19:19)

எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)

பின்னர் (மரியாள்) இயேசுவை கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார் (அல் குர்ஆன் 19:22)இதே கருத்து கூடுதல் விபரங்களுடன் மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது.

மர்யமே! இறைவன் தன் வார்த்தையைப் பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மரியமின் மகனான ஈஸா மஸீஹ் என்பது அவரது பெயர். அவர் இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் (இறைவனுக்கு) நெருக்கமானவராக இருப்பார். அவர் தொட்டில் குழந்தையிலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:45 - 46)

இறைவா! எந்த ஆணும் என்னை தொடாத நிலையில் எனக்கு எப்படி கர்ப்பம் ஏற்படும் என்று அவர் (மரியாள்) கேட்டார் 'தான் நாடியவற்றை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் ;ஆகுக ; என்பான் உடனே அது ஆகிவிடும்' என்று இறைவன் கூறினான் (அல் குர்ஆன் 3:47)

மரியாளை வானவர்கள் நேரடியாக சந்தித்து இயேசு பற்றி சுப செய்தி சொன்ன விபரங்கள், மரியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம், அதற்கு இறைவன் கொடுத்த பதில் என்று எல்லா விபரங்களும் இந்த வசனங்களில் கிடைக்கின்றன. (இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை அதை பின்னர் விளங்கலாம்)

இனி இதுபற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்த்து விட்டு வருவோம் இன்ஷா அல்லாஹ். 

வரலாறு தொடரும் 

உமர்:

மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன் 19:17-19.

மரியாளிடம் பேசியது ஒரு தூதனா? அல்லது பல தூதர்களா?

குர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும் செய்துள்ளது.

1) குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் பல தூதர்கள் பேசினார்கள்".

2) குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்". 

1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45): 

அல்லா கீழ்கண்ட வசனங்களில் "மலக்குகள்" (தூதர்கள்) என்று பன்மையில் சொல்வதைக் காணலாம்.

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),

3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:

கீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒரு தூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

19:17 அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்

19:18 (அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்.

19:19 'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

மேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாக புரியும்.

சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்களை அனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின் சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும் மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.

19:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்

3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."

எனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான்.

சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒரு முறைதான். 

பின் ஏன் அல்லாஹ் "தூதர்கள்" என்றுச் சொல்கிறார் என்று கேட்டால்? 

சொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின் தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக "தூதர்கள்" என்றுச் சொன்னார் என்றுச் சொல்கிறார்கள். இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.

உதாரணம்: 

"முதலமைச்சர் வந்தார்" என்பதைவிட "முதலமைச்சர் வந்தார்கள்" என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள் சில இஸ்லாமியர்கள்.

இந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், "பன்மை" சேர்க்கப்படுவது பெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு) ஆகும். 

ஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது:

"முதலமைச்சர்கள் வந்தார்கள்" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது.

"முதலமைச்சர் வந்தார்கள்" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்பு தரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அல்லாஹ் "தூதர்கள்" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால், கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.

இதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன?

அதற்கு மறுப்பு என்ன என்பதை இங்கு விவரமாக காணலாம். Question and Answers on this issue

நடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும் முரண்பாடுகளையும் செய்துள்ளது. 

எனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின் பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பது தெளிவாகப்புரியும். 

தேவனுக்குச் சித்தமானால், ஜி. நிஜாமுத்தீன் அவர்களின் நான்காவது தொடரைப்பற்றி சிந்திப்போம்.

மூலம்: http://isakoran.blogspot.in/2007/07/3-3.html

தேதி: 4 ஜூலை, 2007

தமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்