பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில் - பாகம் 2

பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? " என்ற தலைப்பில், கீழ் கண்ட விவரங்களை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்: 

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். 

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. 

3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்? 

4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது. 

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

 Source:   http://www.onlinepj.com/book/mahana10.htm

மேற்கண்ட வரிகளுக்கு நாம் அளித்த பதிலின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவு. இப்போது இரண்டாம் பாகத்தைக் காணலாம்.

பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில் - பாகம் 2

பிஜே அவர்களின் வரிகளை அப்படியே பதித்து, முதல் பாகத்தின் பதிலில் விடுபட்ட சில விவரங்களுக்கு என் பதிலை தருகிறேன். 

பிஜே அவர்கள் எழுதியது :

7. பரிசுத்த‌ ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? 

இயேசு பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம். 

இயேசுவிடம் பரிசுத்த‌ ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த‌ ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?

ஈஸா குர்‍ஆன் பதில்: 

இயேசு இறைமகன் என்பதற்கு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பது மட்டும் சரியான வாதமாக இருக்காது என்பதை மேலே சொல்லியுள்ளேன். 

பைபிள் சொல்வதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? பைபிளை முழுவதுமாக ஆராய்வோமா? அப்படியென்றால், பழைய ஏற்பாட்டில் மஸிஹா வைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தேடிப்பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும்.

பிஜே அவர்கள் எழுதியது: 

இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்! 

இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது. 

அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிருக்கும் போதே பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான். (லூக்கா 1:15) 

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த‌ ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக... (லூக்கா 1:67) 

இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்? 

எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டு... (லூக்கா 1:41)

ஈஸா குர்‍ஆன் பதில்:

நீங்கள் மேற்கோள் காட்டும் இவர்களில் யாராவது "பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க" அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா? ஆனால், இயேசுவிற்கே அந்த அதிகாரம் உள்ளது என்று பைபிள் சொல்கிறது. 

நீங்கள் சொல்லிய இவர்களில் யாராவது "உலகத்தில் பாவங்களை மன்னிக்க எனக்கு அதிகாரம் உண்டு" என்று இயேசு சொன்னது போல சொன்னதுண்டா? 

பிஜே அவர்கள் எழுதியது : 

யோவானும் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர் 

அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர் 

அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர் 

என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. 

இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா? 

இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?

ஈஸா குர்‍ஆன் பதில்: 

இயேசு தேவகுமாரன் என்பதற்கு நீர் சொல்லும் வாதம் (இயேசு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்) மட்டும் காரணம் என்று யாரும் கூறவில்லை, அப்படி சொன்னாலும் அது தவறு, இயேசு தேவகுமாரன் என்பதற்கு பலமான ஆதாரங்கள் காரணங்கள் இன்னும் அனேகம் உண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது, தகுந்த இடத்தில் சொல்கிறேன். 

யோவானை நாங்கள் தேவகுமாரன் என்று ஏன் அழைக்கவில்லை என்று எங்களை கேட்பதை விட்டுவிட்டு, யோவான் ஸ்நானகன் எந்த இடத்திலாவது "தான் ஒரு தேவ குமாரன்" என்று சொல்லியதாக பைபிளில் உங்களால் காணமுடியுமா? ஏதாவது ஆதாரம் உள்ளதா உங்களிடம்? [ஓர வஞ்சனையாக கேள்விகள் கேட்பது யார் என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்] 

முதலில் யோவான் தன்னை முதலாவது "தேவகுமாரன்" என்று சொல்லிக்கொள்ளட்டும், பிறகு நாம் அவரை அப்படி அழைக்கலாமா இல்லையா என்பதை பார்க்கலாம். சரி வேண்டாம், குறைந்தபட்சம், தேவனாவது " யோவானை குறிப்பிட்டு" எல்லாருக்கும் முன்பாக, "இவன் என் நேசகுமாரன் " என்று சொன்னதாக ஒரு வசனத்தை ஆதாரமாக உங்களால் காட்டமுடியுமா? 

ஆனால், யோவான், இயேசுவை "தேவகுமாரன்" என்று சொன்னதாக எங்களால் ஆதாரம் காட்டமுடியும் பிஜே அவர்களே. எந்த யோவானை "தேவகுமாரன்" என்று நாங்கள் ஏன் அழைக்கவில்லை என்று சொல்கிறீரோ, அதே யோவான் இயேசுவை தேவகுமாரன் என்றும், உலகபாவங்களை சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்றும் சொல்லியுள்ளார், இதற்கு உங்கள் பதில் என்ன?

யோவான்: 1:33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்என்றான்

பிஜே அவர்கள் எழுதியது: 

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த‌ ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார் ( மத்தேயு 4:1-10) 

இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த‌ ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது. 

யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார். 

அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவடம் பரிசுத்த‌ ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். 

இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?

ஈஸா குர்‍ஆன் பதில்: 

இதற்கு பதில் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 

பிஜே அவர்கள் எழுதியது: 

இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த‌ ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! 

பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். (மத்தேயு 10:20) 

பரிசுத்த‌ ஆவியால் பேசுகின்ற இயேசுவின் சீடர்களும் கடவுளர்களா? 

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

ஈஸா குர்‍ஆன் பதில்: 

நான் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன், தேவ குமாரன் என்பதற்கு அளவு கோள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருத்தல் ஒன்று மட்டும் ஆதாரம் கிடையாது, இது ஒரு பலவீனமான வாதமாகும். பேதுருவைப் பற்றியும், யூதாஸைப் பற்றியும் நான் மேலே விவரித்துள்ளேன். 

பிஜே அவர்கள் எழுதியது: 

அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். (லூக்கா 2:25) 

இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். (அப்போஸ்தலர் 5:32) 

அவன் நல்லவனும், பசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 11:24) 

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு... (அப்போஸ்தலர் 6:5) 

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள் (இரண்டாம் தீமோத்தேயு 1:14) 

தீர்க்கதசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21) 

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்? 

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை. 

தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திருந்து இதை விளங்கலாம். 

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா? 

ஈஸா குர்‍ஆன் பதில்: 

நீர் முன்வைத்த வாதமே சரியானது அல்ல என்று நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன், இதற்கு மேல் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. தேவைப்படுமானால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட இன்னும் சிலரைப் பற்றிய வசனங்களை நான் எடுத்துக்காட்டுவேன், அதனால் இக்கட்டுரைக்கு ஒரு நன்மையும் இல்லை. நீங்கள் எடுத்து காட்டிய இவர்களேல்லாம், பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்களா? அல்லது பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் படைத்தவர்களா என்று விளக்குவீர்களா?

பிஜே அவர்கள் எழுதியது: 

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது. 

சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. (யாக்கோபு 1:13) 

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. 

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10) 

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

ஈஸா குர்‍ஆன் பதில்: 

இதற்கான பதிலை நான் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் (3. இயேசு இறைவன் என்றால், பின் ஏன் சோதிக்கப்பட்டார் ) விவரித்துள்ளேன். 

பிஜே அவர்கள் எழுதியது: 

தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், "இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்'' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.

ஈஸா குர்‍ஆன் பதில்: 

அருமையாக சொல்கிறீர்கள் பிஜே அவர்களே. நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன், "அதாவது, பைபிளை சிறு வயது முதல் ஊட்டப்பட்டதை மறந்துவிட்டு நடுநிலையோடு படித்தால், இயேசு ஒரு நல்ல மனிதர் தான் என்றும், இறைவன் இல்லை என்றும் கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்வார்கள்" என்றுச் சொல்கிறீர். அப்படியானால்:

1. ஏன் முஸ்லீம்கள் பைபிளை தொடவேண்டுமானால், பயப்படுகிறார்கள், உங்களைப் போன்றவர்கள் முஸ்லீம்களை ஏன் பயப்படுத்தி வைத்து இருக்கிறீர்கள்? 

2. பைபிளை படிக்காதீர்கள் என்று ஏன் உங்கள் முஸ்லீம்களுக்கு நீங்கள் சொல்லிவருகிறீர்கள்? 

3. பைபிளை படித்தால், இயேசு ஒரு மனிதர் தான் என்று புரியுமானால்! ஏன் இஸ்லாமியர்கள் எல்லாரும் அதை படிக்கக்கூடாது? அவர்கள் ஏற்கனவே நடுநிலையில் உள்ளவர்கள் தானே, சிறு வயது முதல், கிறிஸ்தவ போதனைகளால் ஊட்டப்படாதவர்கள் தானே? அப்படியானால், முஸ்லீம்கள் பைபிளை படித்தால் என்ன? ஒருவேளை இயேசுவின் அன்பின் போதனைகளால் இழுப்புண்டு, அல்லாவை மறுதலிப்பார்கள் என்ற பயமா? 

4. நீங்கள் மேலே சொன்னது உண்மையானால், உங்களின் இயக்கத்தின் கீழ் உள்ள முஸ்லீம்களுக்காவது நீங்கள் சொல்லமுடியுமா? இனி எல்லாரும் பைபிள் படியுங்கள், பைபிளைப் பற்றி யாரும் பயப்படவேண்டியதில்லை, ஏனென்றால், அதில் இயேசு ஒரு மனிதர் என்று தான் சொல்லியுள்ளது, எனவே, நடுநிலையோடு பயமில்லாமல் படிக்கலாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா? 

எங்களுக்கு ஊட்டப்பட்டதை நாங்கள் மறந்து பைபிளை படிக்கச்சொல்கிறீர், இது சிறிது கடினமே, சரி, நீங்கள் சொல்வது போல செய்ய முயற்சி செய்கிறேன். ஆனால், முஸ்லீம்களுக்கு நீங்கள் சரியாக சிறுவயதிலிருந்து ஊட்டியுள்ளீர்கள் அல்லவா? எனவே, முஸ்லீம்கள் பைபிளை நடுநிலையோடு படித்தால், இன்னும் அதிக சீக்கிரத்தில் இயேசு ஒரு மனிதர் என்பதை அறிந்துக்கொள்வார்கள், அப்படித்தானே? 

நீர் சொல்வது உண்மையானால், எல்லா முஸ்லீம்களையும் பைபிளை படிக்கச் சொல்லுங்கள். ஆனால், எங்களுக்கு அந்த தைரியம் உள்ளது, நான் எல்லா கிறிஸ்தவர்களையும் வேண்டிக்கொள்கிறேன், நீங்கள் எல்லாரும் குர்‍ஆனை படியுங்கள், இயேசுவின் போதனையோடு, முகமதுவின் போதனையை, இயேசுவின் வாழ்க்கையோடு, முகமதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாருங்கள், இயேசுவின் அன்பின் செய்தியோடு, குர்‍ஆனின் அல்லாவின் செய்தியை ஒப்பிட்டுப்பாருங்கள், அப்போது உண்மை என்னவென்று விளங்கும். 

பிஜே அவர்களே, நீங்கள் உங்கள் புத்தகத்தில் செய்த ஒரு புத்திசாலியான தந்திரம் என்னவென்றால், இயேசுவிடம் உள்ள அனைத்து குணங்களையும் தனித்தனியாக பிரித்து, மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒரு மாயையான பொய்யான உருவத்தை உருவாக்கியுள்ளீர்கள். ஆனால், எத்தனை நாட்கள் உங்கள் தந்திரம் வேலை செய்யும் சொல்லுங்கள். 

இப்புத்தகத்தில், நீர் பின்பற்றிய முறை எப்படி உள்ளது என்றால், மகாத்மா காந்தி இப்படி இருப்பார் என்று ஒருவர் சொன்னால், உம்முடைய கேள்விகள் கீழ்கண்டவாறு உள்ளது:

  • தலையில் முடி இல்லையானால் காந்தி ஆகமுடியுமா? எத்தனையோ பேருக்கு தலையில் முடியில்லை, அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை? 
  • அஹிம்சையை பின்பற்றினால், காந்தி ஆகமுடியுமா? எத்தனையோ தலைவர்களும் அஹிம்சையை பின்பற்றுகிறார்கள், அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை. 
  • கையில் ஒரு தடி வைத்திருந்தால், காந்தி ஆகமுடியுமா? எத்தனையோ நபர்களின் கைகளில் தடி உள்ளது, அவர்களை காந்தி என்று ஏன் அழைப்பதில்லை? 
  • சத்தியாகிரகத்தை அவர் நடத்தினால், காந்தி ஆகமுடியுமா? இப்படி பல பேர் பலவிதமான போராட்டத்தை நடத்தினார்கள், அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை? 
  • உடலில் குறைவான உடைகள் உடுத்தியிருந்தால், காந்தி ஆகமுடியுமா? பலபேர் உடையே அணிவதில்லை, அவர்களும் காந்தியா? 

என்று பிரித்து சொல்கிறீர். ஆனால், இந்த எல்லா குணங்களையும் ஒன்று சேர்த்தால், தான் காந்தி. அது போல, நீர் பிரித்துச் சொல்கின்ற எல்லா குணங்கள் அனைத்தையும் உடையவரே கிறிஸ்து ஆவார். 

நீர் சொல்வது போல பிரித்து சொல்லவேண்டுமானால், என்னாலும் சொல்லமுடியும்?

  • யுத்தம் செய்தால் முகமது "நபி" ஆகிவிடுவாரா? உலகத்தில் நிறைய பேர் யுத்தம் செய்துள்ளார்கள்? அவர்களை ஏன் நபி என்று சொல்வதில்லை? 
  • யுத்தத்தில் ஜெயித்தால் முகமது "நபி" ஆகிவிடுவாரா? நிறைய பேர் யுத்தங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள், அவரை ஏன் நபி என்று சொல்வதில்லை? 
  • குர்‍ஆனில் விஞ்ஞானம் சொல்லப்பட்டிருந்தால், அது வேதம் ஆகிவிடுமா? உலகத்தில் விஞ்ஞானம் சொல்லும் எல்லா புத்தகமும் வேதம் என்றுச் சொல்கிறீர்களா? 
  • நல்ல சில சட்டங்கள் குர்‍ஆன் சொன்னால், அது வேதம் ஆகிவிடுமா? நல்ல விசயங்கள் சொல்லும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவைகளும் வேதங்களா? 
  • ஒரு குறிப்பிட்ட மொழி நடையில் பாடல்கள் இருந்தால், அது வேதமா? இப்படி எந்த புத்தகமும் இல்லையா? 
  • தன்னை ஒரு தூதன் சந்தித்தான், தான் "ஒரு நபி என்று தானே" சொல்லிக்கொண்டால், உண்மையில் நபியாகிவிடமுடியுமா? உலகத்தில் நிறைய பேர் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்றளவும் இப்படிப்பட்டவர்கள் எழும்புகிறார்கள், இவர்களும் நபிகளா?

போன்ற கேள்விகளையும் எல்லாரும் கேட்கலாம். இவைகளை உங்களுக்கு முன்பாக கேள்விகளாக நான் வைக்கவில்லை, நீர் பயன்படுத்திய விதம் இப்படி உள்ளது என்று ஒரு எடுத்துக்காட்டிற்காகச் சொன்னேன். நான் முதலாவது உம்முடைய கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அது தான் நல்லது.

பாகம் 2 முடிவடைகின்றது.

மூலம்: http://www.isakoran.blogspot.in/2007/11/blog-post_27.html

பீஜே அவர்களுக்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள் பக்கம்