ரமளான் நாள் 21

இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு,

கடந்த இரண்டு கடிதங்களில் நீ கேட்ட கேள்விக்கு பதிலை நான் எழுதினேன். இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை சுவிசேஷங்களில் உரிமை பாராட்டினார் என்பதை ஒன்பது உதாரணங்களைக் கொண்டு விளக்கினேன், அவைகள் என்னவென்பதை ஒரு முறை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்:

  1. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்.
  2. இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்.
  3. இயேசு யோனாவிலும் பெரியவர்.
  4. இயேசு சாலொமோனிலும் பெரியவர்.
  5. இயேசு யோவான் ஸ்நானகனுக்கு முன்பு இருந்தவர்.
  6. இயேசு ஆபிரகாமுக்கு முன்பே இருந்தவர்.
  7. இயேசு உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்.
  8. இயேசு: தன் உயிரை கொடுக்கவும், மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் படைத்தவர்.
  9. இயேசு: பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர்.

தம்பி உனக்கு "ஒரு  தச்சனிலும் மேலானவர்" என்ற புத்தகத்திலிருந்து இரண்டு மேற்கோள்களை காட்ட விரும்புகிறேன்:

கிறிஸ்து, தேவனாக உரிமைப்பாராட்டினாரா அல்லது இல்லையா என்பதை நிரூபிப்பதற்காக, வேதவசனங்களை  நுட்பமாக  ஆராய்ந்த ஒரு தொழில் அதிபர், "எந்த ஒரு நபர்  புதிய ஏற்பாட்டை வாசித்தும் இயேசு தெய்வத்தன்மையை உரிமைபாராட்டினார் என்ற முடிவுக்கு வராவிட்டால் அவன் பிரகாசமான ஒரு நாளில் திறந்த வெளியில் நின்று கொண்டு, சூரியனைக் பார்க்கமுடியவில்லை என்று சொல்லுகிற  அளவுக்குக் குருடனைப்போல இருப்பான்" என்று கூறினார் (புத்தகம்: ஒரு தச்சனிலும் மேலானவர், பக்கம் 14, ஆசிரியர் ஜோஷ் மேக்டோவெல்)

Joh 5:18  அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.  (யோவான் 5:18)

ஏன் இப்படிப்பட்ட ஒரு வன்மையான தாக்குதல்?

இதற்குக் காரணம், இயேசு "நம் பிதா" என்று அல்ல "என் பிதா" என்றும் இதுவரைக்கும் கிரியை செய்து கொண்டு வருகிறார் என்றும் சேர்த்துக் கொண்டார். இயேசு பயன்படுத்திய இந்த இரண்டு சொற்றொடர்களில், அவர் தம்மை தேவனுடைய கிரியைகளில் இணையானவரும் தேவனுக்குச் சமமானவருமாக்கினார்.  யூதர்கள் தேவனை  "என் பிதா"  என்று குறிப்பிடமாட்டார்கள் அல்லது அவர்கள் அவ்வாறு கூறினாலும் "பரலோகத்தில்" என்று  சேர்த்துக்கொண்டு அந்த கூற்றைத் தகுதிப்படுத்திக்கொள்வார்கள்.  ஆனால், இயேசு இவ்வாறு செய்யவில்லை.  அவர் தேவனை  "என் பிதா"  என்று அழைக்கும் போது யூதர்கள் தவறாக அர்த்தம் கொள்ளாமல் இருக்கத்தக்கதான ஒரு உரிமை பாராட்டுதலை ஏற்படுத்தினார்.  தேவன் கிரியை செய்து கொண்டிருக்கும் போது குமாரனாகிய  அவரும் கூட கிரியை செய்து கொண்டிருப்பதாகவும் இயேசுவை தேவனுடைய  குமாரன்  என்றும் யூதர்கள் புரிந்துக்கொண்டார்கள். இந்த வார்த்தைகளின் விளைவாக  யூதர்களின் பகையுணர்வு வளர்ந்தது. அவரைத் துன்பப்படுத்துவதையே  முக்கியமாக அவர்கள் தேடினபோதிலும், அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதில் தீவிரமுள்ளவர்களாய் இருந்தார்கள். (புத்தகம்: ஒரு தச்சனிலும் மேலானவர், பக்கம் 15, ஆசிரியர் ஜோஷ் மேக்டோவெல்)

புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களை படித்துவிட்டு, இயேசு அவைகளில் தம் தெய்வீகத்தை மறுக்கிறார் என்றுச் சொல்கிறவன் குருடனாக இருக்கவேண்டும். இதைவிட வேறு ஒரு சொல் அவனுக்கு சூட்டமுடியாது தம்பி.

இயேசுவின் உரிமைப்பாராட்டல் பற்றி சுருக்கமாக நான் கூறிவிட்டேன், இப்போது நீ கீழ்கண்ட ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்கவேண்டும்.

1) ஒரு பொய்யார்:

நற்செய்தி நூல்களை நாம் படிக்கும் போது, இயேசு சொன்ன அனேக காரியங்கள் நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும், உனக்கு  நான் 9 காரியங்களை மட்டுமே கடந்த இரண்டு கடிதங்களில் சுருக்கமாக சொல்லியுள்ளேன். நன்றாக சிந்தித்துப்பார், உண்மையாகவே இயேசு இறைவனாக இல்லாமல் இருந்து, நான் மேலே சொன்ன 9 காரியங்களை அல்லது உரிமை பாராட்டலை அவர் சொல்லியிருந்தால், நிச்சயமாக அவரை நீ பொய்யர் என்று அழைக்கலாம்.

ஆனால், இதிலும் ஒரு சிக்கல் உண்டு. அவர் சொல்வது பொய் என்று இருந்திருக்குமானால், அவரோடு இருந்த சீடர்கள் அதனை கண்டுபிடித்து இருந்திருப்பார்கள், உடனே அவரை விட்டு சென்று இருப்பார்கள். அவருக்காக அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து இருந்திருக்கமாட்டார்கள். தங்கள் உயிரை ஒரு பொய்யருக்காக பலியாக கொடுத்து இருந்திருக்கமாட்டார்கள். ஆனால், உண்மை சரித்திரம் சொல்வது என்னவென்றால், இயேசுவின் சீடர்கள் அவருக்காக ஊழியம் செய்து, தங்கள் உயிரையே ஒப்புக்கொடுத்தார்கள். மேலும் அவர் சொல்வது பொய்யாக இருந்திருக்குமானால், அற்புதங்கள் எப்படி நடந்தது, மக்கள் எப்படி அவரை தேவகுமாரன் என்று ஏற்றுக்கொண்டார்கள்?

எனவே, இயேசு ஒரு பொய்யர் அல்ல என்பது தெளிவாகும்.

2) இரண்டாவதாக, அவர் ஒரு பைத்தியக்காரர் என்றும் நீ சந்தேகிக்கலாம்.

அதாவது நான் ஆதியிலிருந்து இருக்கிறேன், ஆபிரகாமுக்கு முன்பே நான் இருக்கிறேன், என்றெல்லாம் இயேசு கூறினார். நாம் மேலே கண்டது போல, அவர் பொய் சொல்லவில்லை. அப்படியானால் தன்னை அறியாமலேயே ஒரு பித்து பிடித்தவர் போல கூறினாரா?  இந்த முடிவும் சரியானதல்ல, ஏனென்றால் அவரது ஞானத்திற்கு முன்பு பெரிய யூத தலைவர்களும் தோற்றுபோயினர், கலங்கிபோயினர். அவரது வார்த்தைகளை கேட்க அனேக ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வந்தனர், நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரரும் அல்ல. இந்த தெரிவும் இதன் மூலம் அடிபட்டு போகிறது. 

3) மூன்றாவதாக, ஒரே ஒரு தெரிவு தான் உனக்கு மிஞ்சுகிறது, அதாவது அவர் தான் தெய்வம், அவர் தான் ஆண்டவர்.

அவர் ஒரு பொய்யரும் இல்லை, பித்தரும் இல்லை, அப்படியானால், இவ்விதமாக பேசுகிறவர் யாராகத்தான் இருக்கமுடியும்? இறைவனாகத் தான் இருக்கமுடியும், முதல் நான்கு சுவிசேஷ நூல்களை படிப்பவர்களுக்கு இயேசு வேறு வாய்ப்பை அல்லது தெரிவை வைத்துவிட்டு போகவில்லை.

தம்பி, "அவர் ஒரு சன்மார்க்கர், நீதிமான், அல்லது தீர்க்கதரிசி" என்று நீ சொல்லலாம், ஆனால், இது சாத்தியமில்லை தம்பி. சுவிசேஷ நூல்களில் படித்துப்பார்க்கும் போது, இயேசு பேசியது போல "ஒரு நீதிமான், தீர்க்கதரிசி அல்லது சன்மார்க்கன்" பேசமாட்டான், அவனால் முடியாததும் கூட.

தச்சனிலும் மேலானவர் என்ற புத்தகத்திலிருந்து இன்னொரு மேற்கோளை காட்டி இந்த கடிதத்தை முடிக்க விரும்புகிறேன்:

"நான் யூத ஜனங்களுடன் இதை விவாதித்த போது அவர்கள்  எவ்வாறு  பதிலளித்தனர் என்பது ஆர்வமுட்டுவதாக இருக்கிறது.  இயேசு ஒரு சன்மார்க்க, நேர்மையான தேவபக்தியுள்ள தலைவர், ஒரு நல்ல  மனிதன், ஒரு விதமான  தீர்க்கதரிசி என்று வழக்கமாக  அவர்கள் என்னிடம் சொல்லுவார்கள். இயேசு தம்மைப் பற்றி உரிமை பாராட்டியவைகளையும் மற்றும்  இந்த அத்தியாயத்திலுள்ள, மூன்றில் ஒன்றைத் (பொய்யர், பித்தன் அல்லது ஆண்டவர்) தெரிந்தெடுப்பதைப் பற்றிய  கருத்துப் பொருளைப் பற்றியும் அவர்களோடு நான் பகிர்ந்து கொண்டேன். இயேசு ஒரு பொய்யர்,  என்று அவர்கள்  நம்புகிறார்களா என்று நான் கேட்டதற்கு  'இல்லை' என்று உடனடியாக திட்டவட்டமாக பதில் வந்தது. 'அவர் ஒரு பித்தன் என்று நம்புகிறீர்களா?' என்று வினவிய போது, 'திட்டவட்டமாக  இல்லை' என்று மறுமொழியளித்தனர். 'அவர் ஒரு தேவனாக இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா' என்ற  கேள்விக்கு நான் பேசி முடிப்பதற்குள் உடனடியாக 'முற்றிலும் இல்லை' என்று எதிரொலித்தனர். ஆயினும் எந்த ஒரு மனிதனுக்கும் இம்மூன்று தெரிந்தெடுப்புகளே உள்ளன. (பக்கம்34)"

ஆக, உனக்கு மிஞ்சம் ஒரே வாய்ப்பு, அல்லது தெரிவு, இயேசு தான் ஆண்டவர் என்று அவர் பாதத்தை முத்தஞ்ச் செய்வது தான்.

மேலும் உனக்கு சந்தேகம் இருந்தால், எனக்கு எழுத மறவாதே. இஸ்லாமில் உன் நம்பிக்கை திடமாக இருந்தால், ஒரு முறை சுவிசேஷ நூல்களை படித்துப் பார். உனக்கு புரியும்.

இப்படிக்கு, உன் சகோதரன்,

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்