ரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா?

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

 அன்புள்ள தம்பி,

உனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

எனக்கு நீண்ட நாட்களாக இஸ்லாமியர்களிடம் ஒரு குறிப்பிட்ட கேள்வியை  கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை எந்த முஸ்லிமிடம் கேட்பது? இன்று அதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, ஏனென்றால், என் தம்பி தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லியுள்ளான்.

என் கேள்வி இது தான்:

அல்லாஹ் தன்னை வணங்க படைத்தது இயந்திரங்களையா? அல்லது மனிதர்களையா?

தம்பி, நான் ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்று உனக்கு புரிகின்றதா? அதாவது உனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு சில இதர மொழிகள் தெரியும். உனக்கு அரபி மொழி தெரியாது என்று எனக்குத் தெரியும்.

ஆனால்,

  • நீ அல்லாஹ்வை எப்படி தொழுதுக்கொள்கிறாய்? எவைகளைச் சொல்லி தொழுதுக்கொள்கிறாய்?
  • உனக்கு புரியும் மொழிகளாகிய தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறாயா? அல்லது அரபியில் தொழுதுக்கொள்கிறாயா?
  • நீ நமாஜ் செய்யும் போது எந்த மொழியை முக்கியமாக பயன்படுத்துகிறாய்? எந்த மொழியில் கலிமாக்களை சொல்கிறாய்?
  • நீ அரபியில் தான் நமாஜ் செய்கிறாய் என்பது நிச்சயம். அப்படியானால், நீ என்ன சொல்கிறாயோ அது உனக்கு புரிகின்றதா? அல்லது ஒரு டேப்ரிகார்டர் போல, மனப்பாடம் செய்ததை புரியாமல் ஒப்புவிக்கிறாயா?
  • நீ அரபியில் சில வசனங்களை மனப்பாடம் செய்து, அவைகளை ஒப்புவிக்கிறாய் என்றால், நீ மனிதனா அல்லது இயந்திரமா?

இயந்திரங்களில் விவரங்களை சேமித்து வைத்துவிட்டால், தேவைப்படும்போதெல்லாம் அவைகள் ஒலிப்பெருக்கியில் வாசித்துத்தள்ளும். ஒரு இலட்சம் முறை அவைகளை அது வாசித்தாலும், அந்த இயந்திரத்திற்கு எந்த ஒரு உணர்வும், சொரணையும் இருக்காது.  தான் வாசித்துத் தள்ளிய வார்த்தைகளில் உள்ள உண்மையும், கருத்துக்களும் அந்த இயந்திரத்திற்கு தெரியாது.

தம்பி, இந்த இயந்திரத்தைப் போல நீயும் அரபியில் தான் உன் இறைவனை தொழுதுக்கொள்கிறாயா? ஆம் என்று தான் நீ பதில் அளிக்கவேண்டும்.

உனக்கு புரியாத மொழியில் நீ எப்படி மற்றவர்களிடம் பேசுவாய்? உனக்கு புரியாதவற்றை ஒப்புவிப்பதினால், உன் உள்ளத்தில் எந்த ஒரு மாற்றமோ அல்லது பேசப்பட்ட வார்த்தைகளில் இருக்கும் பொருளோ புரியப்போவதில்லை, இதனால் என்ன பயன்? இப்படி செய்வதினால் இயந்திரத்திற்கும், உனக்கும் இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

காது கேளாதவர்கள் செய்திகளை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக செய்திகள் வாசிக்கும் போது, “காது கேளாதவர்கள் புரிந்துக்கொள்ள சைகை மூலமாக” செய்திகளை தெரிவிக்கிறார்கள்.  உலக செய்திகளுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், இறைவனை தொழுதுக்கொள்வதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்திருக்கவேண்டும்? உலக விஷயங்களுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், ஆன்மீக விஷயங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்?

தம்பி, உனக்கு ”பிரைலி” என்று ஒன்று இருப்பது தெரியுமா? அதாவது கண்கள் தெரியாதவர்கள் படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையாகும்.  எனக்கு கண்கள் தெரியாது எனவே நான் படிக்கவில்லை, உலகை புரிந்துக்கொள்ள வில்லை என்று யாரும் இந்த காலத்தில் சொல்லமாட்டார்கள். ஆனால், கண்கள் இருந்தும், காதுகள் இருந்தும், இன்னும் நீ உன் இறைவனை புரியாமலேயே தொழுதுக்கொள்கிறாய். என்ன ஆச்சரியம் பார்த்தாயா? குருடர்கள் பிரைலி முறையை கற்றுக்கொண்டு படித்து தெரிந்துக்கொள்கிறார்கள், காது கேளாதவர்கள் கூட சைகை மொழியை கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் நீ என்ன செய்யப்போகிறாய்?

ஒரு உண்மையான இறைவன், தன்னை வணங்கும் மனிதர்கள் வெறும்  மனப்பாடம் செய்த வசனங்களை தலை கால் புரியாமல் மடமடவென்று ஒப்புவிப்பதை விரும்புவானா? அல்லது தன்னை வணங்கும் மனிதன் தன் இருதய ஆழத்திலிருந்து நான்கு வார்த்தைகளைச் சொல்லி, இறைவனை புகழ்ந்து, அவன் செய்த நன்மைகளை நினைத்து, நன்றி சொல்லுவதை விரும்புவானா?  இறைவனை தொழுதுக்கொள்கின்றவர்கள் உண்மையோடும்,  தாம் பேசும் வார்த்தைகளின் பொருளை புரிந்துக்கொண்டும் தொழவேண்டும் என்று பரிசுத்த பைபிளில் இயேசு கூறியுள்ளார். 

மனிதனுக்குத் தான் இயந்திரங்கள் தேவை, இறைவனுக்கு மனிதன் தான் தேவை இயந்திரங்கள் அல்ல.

ஒரு மனிதன் 50 ஆண்டுகள் இஸ்லாமியனாக வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் 5 வேளை தொழுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இந்த 50 ஆண்டுகளில் அவன் (50*365*5)  91250 முறை தொழுகை செய்வான், ஆனால், தனக்கு புரியாத, மொழியில் இத்தனை முறை தொழுதுக்கொண்டும், எந்த ஒரு பயனும் அவனுக்கு கிட்டுவதில்லை. பெயரளவிற்கு ஒரே பயன் மட்டும் கிட்டும் என்றுச் சொல்லிக்கொள்ளலாம், அது என்ன? ”நான் இஸ்லாமிய கடைமையை நிறைவேற்றினேன் (என்ன செய்கிறோம் என்று புரிந்துக்கொள்ளாமலேயே). அதாவது, படிப்பு படிக்காமலேயே பெயருக்கு பின்னால், M.A. MSc. என்று சிலர் எழுதிக்கொள்கிறார்களே, அது போல நானும் இறைவனை தொழுதுக்கொண்டேன் என்ற வரட்டு திருப்தி மட்டும் கிடைக்கும்.  இதனை இறைவன் அங்கீகரிப்பான் என்று நீ நினைக்கிறாயா?

”அல்லாஹ் தான் இப்படி சொல்லியுள்ளான்” என்று நீ சொல்லலாம், இப்போது கேள்வி அதுதான், இயந்திரங்களைப் போல  தன்னை வணங்க உண்மையான இறைவன் விரும்புவானா? “ஆம்” என்று நீ சொன்னால் அவன் உண்மையான இறைவன் இல்லை என்பது தான் உண்மை.

நீ இவைகளைப் பற்றி சிறிது சிந்துத்துப்பார்க்கவேண்டுமென்று உன்னை உற்சாகப்படுத்துகிறேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்