2014 ரமளான் பாகம் 1: அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின் அறிவியலும் - அழுகிப்போன தக்காளியில் தத்தளிக்கும் அல்லாஹ்

உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். அவர் இஸ்லாமை தழுவியுள்ளார். உமரோடு அவ்வப்போது இஸ்லாம் பற்றி பேசுவார், கிறிஸ்தவம் பற்றி கேள்விகளைக் கேட்பார். ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் இவ்விருவரும் சில தலைப்புகளில் விவாதிப்பதும்,  கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் உண்டு.  இவ்வாண்டும் உமரின் தம்பி, "அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின் அறிவியலும்" என்ற தலைப்பில் உமரோடு பேசப்போகிறார்.   உண்மையிலேயே குர்-ஆனில் அறிவியல் உண்டா?  அல்லாஹ் தற்காலத்தில் செய்யும் அற்புதங்கள் என்னென்ன?  இஸ்லாமிய அறிஞர்கள் குர்-ஆன் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு மக்களை மயக்குவதற்கு "குர்-ஆனில் அறிவியல் உண்டு" என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களா?  இவைகளை இந்த ரமளான் மாத தொடர் கட்டுரைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொரு விவரத்தையும், வசனத்தையும் படித்து, ஆய்வு செய்து உங்கள் முடிவிற்கு வாருங்கள். 

வாருங்கள்… ரமளான் மாதத்தின் முதல் நாளுக்குள் செல்வோம்….

2014 ரமளான் பாகம் 1:  அழுகிப்போன தக்காளியில் தத்தளிக்கும் அல்லாஹ்

[அமைதியான மாலை நேரம், ரமளானின் முதல் நாள், உமர் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு, தேனீரை ருசித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் மொபைளுக்கு ஒரு அழைப்பு வருகிறது. உமர் ஒரு கையில் தேனீர் கோப்பையை பிடித்தபடியே, இன்னொரு கையில் மொபைளை எடுத்து பேச ஆரம்பிக்கிறார்].

உமர்:  ஹலோ தம்பி 

தம்பி:  ஹலோ அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்:   வா அலைக்கும் ஸலாம் தம்பி. நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி:  நான் சுகமாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க? பிள்ளைகள்  மற்றும் அண்ணி, அம்மா அப்பா எப்படி இருக்கிறாங்க?

உமர்:   கர்த்தரின் கிருபையால் எல்லாரும் சுகமாக இருக்காங்க.  சௌதியில் ரமளான் மிகவும் கோலாகளமாக கொண்டாடப்படப்போகிறது என்று நினைக்கிறேன். இன்று நோன்பின் முதல் நாள் இல்லையா?

தம்பி:  ஆம் அண்ணா, இன்று தான் ரமளான் முதல் நோன்பு ஆரம்பிச்சுது.

உமர்:  நல்ல விஷயம் தான். இந்த ஆண்டும் நீ 30 நாட்கள் நோன்பு இருப்பாய் அல்லவா?

தம்பி:  இதில் என்ன சந்தேகம்? இதற்காகத் தான் நான் ஆண்டு முழுவதும் ஆவலாக காத்திருந்தேன்.

உமர்:  உன் நோன்பு சிறக்க என் வாழ்த்துக்கள். சரி என்ன விஷயம் சொல்? காரணமில்லாமல் நீயாக அழைக்கமாட்டாயே!

தம்பி:  ம்ம்ம்… புரிந்துக்கொண்டால் சரி. நான் விஷயத்துக்கு வருகிறேன். இந்த ஆண்டு ரமளான் மாதத்தில் உங்களுக்கு சில அல்லாஹ்வின் அற்புதங்களையும்,  குர்-ஆனின் விஞ்ஞான  முன்னறிவிப்புகளையும் காண்பித்து,  இஸ்லாமின் அருமை பெருமைகளைப் பற்றி பேசலாம் என்று விரும்புகிறேன்.  குர்-ஆனுக்கு வெளியே, ஏதாவது ஆதாரம் உண்டா என்று அடிக்கடி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் இல்லையா? இதோ இந்த மாதம் என்னால் முடிந்தவரை உங்களுக்கு சில விவரங்களை எடுத்துச் சொல்கிறேன்.

உமர்:  வா…வ். என்னே ஒரு அருமையான ஐடியா! எனக்கு இது பிடிச்சுருக்கு.  நீ சொல்வதைப் பார்த்தால், இதற்காக அதிகமாக ஆய்வு செய்து, பெரிய அளவில் தயாரான நிலையில்  இருக்கிறாய் என்று நினைக்கிறேன்.

தம்பி:  பொறுத்திருந்து பாருங்கள், உங்களுக்கே புரியும்.  உங்களுக்கு இப்போது நேரமிருந்தால், ஸ்கைப்பில் (Skype) வருகிறீர்களா? நாம் பேசுவோம்.

உமர்:  மொபைளிலேயே பேசலாமே!

தம்பி:  இல்லை.. இல்லை.. நான் சில இணைய தொடுப்புக்களை, படங்களை அனுப்புவேன், அவைகளை நீங்கள் பார்க்கவேண்டும். அவைகள் நம் உரையாடலுக்கு உதவியாக இருக்கும்.

உமர்:   சரி, எனக்கு ஐந்து நிமிடங்கள் கொடு, நான் ஸ்கைப்பில் லாகின் ஆகிவிடுகிறேன்.

தம்பி:  ரொம்ப நல்லது, நான் ஸ்கைப்பில் லாகின் ஆகி உங்களுக்காக காத்திருக்கிறேன்.

[இருவரும் சில நிமிடங்களுக்கு பிறகு ஸ்கைப்பில் லாகின் ஆகி,  பேச ஆரம்பிக்கிறார்கள்]

தம்பி:  அண்ணா,  நான் ஒரு முக்கியமான அற்புதத்தை காட்டப்போகிறேன். தற்காலத்தில் அல்லாஹ் செய்துவரும் அற்புதங்கள் ஏராளம்.

உமர்:  அப்படியா தம்பி! தன்னுடைய இறைத்தூதர் முஹம்மது வாழ்ந்த காலத்தில்  அற்புதங்களைச் செய்து தன் இறைத்தூதருக்கு உதவி செய்யாத அல்லாஹ்வா? தற்காலத்தில் அதிகமாக அற்புதங்களைச் செய்துக் காட்டுகிறார்?

தம்பி:  அண்ணா, வேடிக்கைவேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த தொடுப்புகளை ஒரு முறை சொடுக்கிப் பாருங்கள்.

உமர்:  அப்படி என்ன இந்த தொடுப்புகளில் உள்ளது. இதோ சொடுக்கிப் பார்க்கிறேன்.    

தம்பி:   பார்த்தீங்களா? நன்றாக கவனித்துப் பாருங்கள்.

உமர்:  ம்ம்ம் பார்த்தேன்.. அழுகிப்போன தக்காளிகளைப் பார்த்தேன். நீயே கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்.

தம்பி: உங்களுக்கு புரியவில்லையா? அல்லது தெரியாதவர் போல நடிக்கிறீர்களா?

உமர்:  சில விஷயங்கள் அவரவர் வாயாலே கேட்டால் தான் நன்றாக இருக்கும். நீயே விளக்கிவிடு.

தம்பி:  அல்லாஹ் தன் பெயரை தக்காளியில் பதித்து இருக்கிறார். இது தான் அற்புதம். இது போல, வேறு எந்த ஒரு இறைவனுடைய பெயரையாவது பார்க்கமுடியுமா?

உமர்:  ஓ அந்த அழுகிப்போன தக்காளியில் நாம் காண்பது அற்புதமா?  

தம்பி:  இஸ்லாமின் அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லை என்பதற்காக, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீர்கள்.

உமர்:  சரி, தக்காளியில் தன் பெயரை பதித்ததின் மூலமாக, அல்லாஹ் உலகிற்கு எதனைச் சொல்லவருகிறார் என்பதை நீ விளக்கமுடியுமா?

தம்பி:  அல்லாஹ் தான் உலகத்தின் அதிபதி மற்றும் படைப்பாளி என்பது இந்த அற்புதத்தின்  மூலம் விளங்குகிறது அல்லவா?

உமர்:  ஓ நீ அந்த வழியில் வருகிறாயா? 

தம்பி:  என் வழி தனி வழி…

உமர்:  பார்த்து தம்பி, யாருமே போகாத வழியில் போனால், எங்கு போகிறோம் என்று தெரியாமல் வழி தவறி சென்றுவிடுவோம்.

தம்பி: போதும் அண்ணே! போதும். விளையாட்டுத்தனமாக பேசியது போதும்.  நான் சீரியஸாக கேள்வி கேட்டால் .. நீங்க வேடிக்கையாகவே பேசிக்கிட்டு இருக்கீங்க…

உமர்:  சரி, நானும் சீரியஸாக இந்த விஷயத்தை எடுத்துக்கொள்கிறேன். உனக்கு சில அடிப்படை விஷயங்களை முதலாவது சொல்லிவிடுகிறேன், அப்போது தான் இப்படிப்பட்ட தற்கால இஸ்லாமிய அற்புதங்களின் உண்மை நிலை உனக்குப் புரியும்.

1) தற்கால அற்புதமும், ஏழாம் நூற்றாண்டு அற்புதமின்மையும்:

உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அனேகர் முஹம்மதுவிடம்  வந்து இப்போது அற்புதங்கள் செய்துக்காட்டுங்கள் அப்போது நீர் ஒரு இறைத்தூதர் என்று நம்புவோம் என்று கேள்வி கேட்டனர்.  ஆனால், அல்லாஹ்வினால் எந்த வெளிப்படையான அற்புதமும் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிப்பதற்காக செய்து காட்டப்படவில்லை. நான் கொண்டு வந்த அற்புதம் குர்-ஆன் மட்டும் தான் என்றுச் சொல்லி முஹம்மது மழுப்பினார்.  இயேசுவைப்போல மரித்தவர்களை எழுப்பி, வியாதியுள்ளவர்களை குணமாக்கியிருந்திருந்தால், இன்னும் அனேகர் முஸ்லிம்களாக மாறியிருப்பார்கள். 

குறைந்த பட்சம், அந்த காலத்திலாவது அல்லாஹ் இப்படிப்பட்ட "தக்காளி அற்புதங்களை" செய்து இருந்திருந்தால், அக்கால மக்கள் ஒருவேளை இவரை நம்பியிருப்பார்கள்.  தன் இறைத்தூதர் உயிரோடு இருக்கும் போது அற்புதங்களைச் செய்யாத அல்லாஹ், 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு, இப்போது வந்து தக்காளியில் அற்புதங்கள் செய்கிறார் என்றுச் சொல்வது, அல்லாஹ்வை மட்டுப்படுத்துவதாகும். 

எந்த நேரத்த்தில் அற்புதங்கள் தேவையோ, அப்போது செய்யாமல், தேவையில்லாத இக்காலத்தில் அற்புதம் செய்வது என்பது சர்வ ஞானியான அல்லாஹ்விற்கு ஏற்றதல்ல, இதனை சராசரி மனிதர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

2) அழுகிப்போன தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் – இது அல்லாஹ்விற்கு மேன்மையா?

உன்னைப்போன்ற முஸ்லிம்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், "இஸ்லாம் பற்றி எந்த ஒரு தகவல் கிடைத்தாலும், அதனை சரி பார்க்காமல், சிந்திக்காமல் மற்றவர்களுக்கு அவைகளை அனுப்பிவிடுவதாகும்".  நீ கொஞ்சமாவது சிந்தித்து இருந்திருந்தால், இந்த பரிதாப நிலைக்கு அல்லாஹ் தள்ளப்பட்டு இருந்திருக்கமாட்டார். 

ஒரு அழுகிப்போன தக்காளியிலா அல்லாஹ் தன் பெயரை பதிப்பார்? அல்லது 

ஓரிரு நாட்களில் அழுகிப்போகும் ஒரு பழத்திலா அல்லாஹ் தன் பெயரை பதிப்பார்?  

அழுகும் ஒரு பொருளின் மூலமாக உலகிற்கு எதனை தெரிவிக்க விரும்புகிறார் அல்லாஹ்?

உலகில் எப்போதும் நிலைத்து இருக்கும் ஒரு பொருளில் தன் பெயரை பதித்து இருந்திருந்தால், ஓரளவிற்கு சொல்லிக்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கும் தெம்பு வரும், ஆனால், இப்படி வாடி வதங்கி அழுகும் ஒரு பொருளிலா ! அற்புதம் செய்வார் அல்லாஹ்? அந்தோ பரிதாபம். 

தம்பி:  இதை அதைச் சொல்லி, முக்கியமான விஷயத்தை மறைக்க முயலாதீர்கள்? தக்காளி அழுகியதோ, இல்லையோ!  தக்காளியில் அல்லாஹ்வின் பெயரைப் பார்த்தீர்களா? இல்லையா?

உமர்:  நீ கணினிக்காலத்தில் வாழ்ந்துக்கொண்டு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் போடும் அட்டகாசத்தை கண்டு களித்துக்கொண்டு இருக்கும் இந்த காளத்தில் ஒரு படத்தைக் காட்டி, இதில் அல்லாஹ்வின் பெயரை பார்த்தீர்களா இல்லையா? என்று கேட்பது, முட்டாள் தனமாக இருக்கிறது தம்பி.

நீ காண்பித்த முதலாவது படத்தில்,  வரும் "அல்லாஹ்" என்ற வார்த்தை கிராபிக்ஸில் செய்யப்படவில்லை என்று உன்னால் நிரூப்பிக்கமுடியுமா?

தம்பி  நீ விரும்பினால், உன் பெயரையும் தக்காளியில் கிராபிக்ஸில் போட்டு படத்தை தயார் படுத்தமுடியும்.  என்னிடம் சொன்னது போல வெளியே முஸ்லிமல்லாதவர்களிடம்  சொல்லிவிடாதே உன்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரிப்பார்கள். ஆக, முதலாவது படம் ஒரு "இட்டுக்கட்டப்பட்ட" தக்காளியாகும் அல்லது  அல்லாஹ்வாகும். 

தம்பி:   இதை நான் நம்பமாட்டேன்.

உமர்:  நீ முஸ்லிமாக மாறிவிட்டபிறகு நல்ல விஷயங்களை எதைத் தான் நம்பியிருக்கிறாய் சொல்லு, இதனை நம்புவதற்கு?  கிராபிக்ஸில் பிரமிப்பூட்டும் விஷங்களை உலகம் செய்துக் காட்டிக்கொண்டு இருக்கும் போது, அழுகிப்போன தக்காளி படத்தில் எவனோ ஒருவன் (கண்டிப்பாக அவன் முஸ்லிம்காகத் தான் இருப்பான்) செய்த கயமைத் தனத்தை பிடித்துக்கொண்டு இது அல்லாஹ்வின் அற்புதம் என்றுச் சொல்கிறாயே உனக்கு வெட்கமாக தெரியவில்லை? நீ படித்த படிப்பிற்கும், அறிவிற்கும் இது அடுக்காது தம்பி. 

தம்பி: ஆனால், அடுத்த படத்தில் தெளிவாக அல்லாஹ்வின் பெயர் தெரிகின்றதே! இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?  

உமர்:  அடேய், என் அருமை தம்பி, உனக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், மறுபடியும் நீ பழைய நிலைக்கே வருகிறாயே! நீ எப்போ தான் திருந்தப்போகிறாய்.

சரி, இந்த இரண்டாவது படத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.  உலகில் காணும் அனேக விஷயங்களில் சில வடிவங்கள் நமக்கு தெரிந்த உருவங்களாகத் தெரியும். சில கோடுகளைக் காட்டி இது தான் அல்லாஹ் செய்த அற்புதம் என்றுச் சொல்வது அடிமுட்டாள் தனமாகும்.  

தம்பி:  இப்போது மாட்டிக்கிட்டீங்க பார்த்தீங்களா?  இதற்கு உங்களால் பதில் சொல்லமுடியவில்லை.  அது கிராபிக்ஸ் இல்லை என்று புரிந்துக்கொண்டீங்களா?

உமர்: சிலருக்கு சூடாக பதில் கொடுத்தால் தான் புத்தி வரும், மென்மையாகச் சொன்னால் புரியாது. இன்னும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாக அடிபட்டால் தவிர நீ விடமாட்டாய் போல் இருக்கிறது.  உனக்கு புரியும்படி சொல்கிறேன் கேள், இல்லை இல்லை சில கேள்விகளை கேட்கிறேன் பதில் சொல்லு:

முதல் கேள்வி:

உன் அல்லாஹ் ஒரு மொழிக்கு மட்டும் சொந்தமானவரா? அல்லது உலக மொழிகள் அனைத்திற்கும் உரியவரா?

தம்பி:  உலக மொழிகள் அனைத்தும் அவருக்குத் தெரியும், அவர் இறைவன், ஆகையால் எல்லா மொழிக்கும், நாடுகளுக்கும் சொந்தமானவர்.

உமர்: அப்படியானால், மேற்கண்ட "அரபி தக்காளி" போலவே

  • தமிழ் தக்காளி
  • ஹிந்தி தக்காளி
  • பஞ்சாபி தக்காளி

என்று நம் நாட்டில் இருப்பவர்களுக்கு புரியும் படி, அவரவர் மொழிகளில் ஏன் அல்லாஹ்வின் பெயர் வருவதில்லை?

தமிழ் நாட்டு மக்கள் தங்கள் வீட்டில் தக்காளிகளை அறுத்துப் பார்த்தால் "தமிழில் அல்லாஹ்" என்ற எழுத்துக்களை அவர்களால் பார்க்கமுடியுமா?

உன் அல்லாஹ் அரபி மக்கள் பேசுபவர்கள் அறுக்கும் தக்காளியில் மட்டுமே அற்புதங்கள் செய்வாரா? தமிழிலே, ஹிந்தியிலே இன்னும் உலக மொழிகளில் அல்லாஹ் அற்புதம் செய்யமாட்டாரா?

தம்பி:  நீங்க டாபிக்கை மாற்றி பேசுறீங்க!

உமர்:   நான் இன்னும் தக்காளிக்குள்ளேயே இருக்கிறேன், அதை விட்டு வெளியே வரவில்லை. உன்னால் பதில் சொல்லமுடியவில்லை என்றுச் சொல்லு.

இரண்டாவது கேள்வி:

• இந்த தக்காளி அற்புத்தை, இப்போது தான் அல்லாஹ் செய்ய ஆரம்பித்தாரா? அல்லது முஹம்மதுவின் காலத்திலிருந்தே செய்துக்கொண்டு இருக்கிறாரா? அப்படியானால், முஹம்மதுவிற்கு இதனை ஏன் அவர் வெளிப்படுத்தவில்லை?

• மேலும், முஹம்மதுவின் காலத்துக்கு முன்னே, மற்றும் பைபிளின் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்த தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் இல்லையா?

• கடைசியாக, அரபி மொழி உருவாகாமல் இருந்த கால கட்டத்தில் இருந்த தக்காளிகளில் இந்த கோடுகள் (அல்லாஹ்வின் பெயர்) இல்லாமல் இருந்ததா? அல்லது இஸ்லாம் வந்த பிறகு வளர்ந்த தக்காளிகளில் மட்டுமே இந்த அல்லாஹ்வின் அற்புதம் வெளிப்பட்டதா?

தம்பி:  ம்ம்ம்…..

உமர்:  என்ன தம்பி தலை சுத்துதா? ஒரு தக்காளி சூப் போட்டு சூடாக ஒரு கப் குடித்துப் பார், உனக்கு உண்மை விளங்கும்.

மூன்றாவது கேள்வி:

ஸ்பானிஸ் தக்காளி  திருவிழா என்ற பெயரில் திருவிழா நடைப்பெறுகிறது. தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடுகிறார்கள். தம்பி, இந்த தக்காளிகளில் மக்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகின்றது,  இந்த தக்காளிகளிலும் நாம் அல்லாஹ்வின் பெயரை பார்க்கமுடியுமா?

http://en.wikipedia.org/wiki/La_Tomatina

இது மாத்திரமல்ல, கடைத்தெருக்களில் அழுகிப்போன தக்காளிகளை குப்பைகளில் கொட்டுவார்கள்,  அந்த தக்காளிகளிலும்  அல்லாஹ்வின் பெயரை பார்க்கமுடியுமா தம்பி?

தம்பி:  உங்களால் அல்லாஹ்வின் அற்புதத்தை மறுக்கமுடியாது.

உமர்:  இவ்வளவு எடுத்துச் சொல்லியும், மறுமடியும் நீ ஆரம்பத்திற்கே வருகிறாயே! இப்படிப்பட்ட அற்புதங்கள் அல்லாஹ்வின் பெயரை கெடுக்கிறதே தவிர அவருக்கு பெருமையைக் கொண்டு வராது.

[இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவர்களின் தாய் உமரின் அறைக்குள்ளே வருகிறார்கள்.]

அம்மா:  என்ன ஒரே சத்தமாக பேசிக்கொண்டு இருக்கிறாய்? யாரிடம் பேசுகிறாய்?

உமர்:  அம்மா,  ஸ்கைப்பில் நான் தம்பியோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

அம்மா: தம்பியா!  இதோ நானும் பேசறேன். நீ எழுந்திரு.

[உமர் அடுத்த நாற்காலியில் உடகாருகிறார், அவரின் தாய் பேச ஆரம்பிக்கிறார்கள்]

அம்மா:  ஹலோ… எப்படி இருக்கே நீ, சுகமாக இருக்கிறாயா?

தம்பி:  அம்மா, நான் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க.

அம்மா: கர்த்தரின் கிருபையால் சுகமாக இருக்கிறேன். நான் உன் நண்பனிடம் கொடுத்து அனுப்பிய தக்காளி ஊறுகாய் கிடைச்சுதா? உனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதற்காக ஸ்பெஷலா செஞ்ஜி அனுப்பினேன். வந்து சேர்ந்துச்சா?

தம்பி:  அம்மா…. தக்காளி  ஊறுகாய் பற்றி இப்போது தான் பேசனுமா? இதைப் பத்தி பேச உங்களுக்கு வேறு நேரமே கிடைக்கலையா? எல்லாம் வந்து சேர்ந்திச்சு போங்க.

அம்மா: ஏன் இப்படி கோபமா பேசறே? எனக்கு ஒன்றும் புரியலையே!

உமர்:  அம்மா, உங்களுக்கு புரியாது. அது அவ்வளவு தான், தம்பிக்கு தக்காளி என்றுச் சொன்னா, இன்றிலிருந்து அலர்ஜி.  நீங்க போங்க நான் சீக்கிரமாக பேசிட்டு வரேன்.

[அம்மா அறையை விட்டுச் செல்கிறார்கள்]

தம்பி, அல்லாஹ்வின் பெருமையை உயர்த்த "தக்காளி அற்புதம்" உனக்கு பயன்படாது. தக்காளிக்கு வெளியே ஏதாவது அற்புதம் அல்லாஹ் செய்து இருந்திருதால், அதைப் பற்றி எனக்குச் சொல்லு, நாம் பேசுவோம்.

தம்பி:  ம்ம்ம்… இன்னும் அனேக அற்புதங்கள், விஞ்ஞான உண்மைகள் என்று அனேக விஷயங்கள் கொட்டுக்கிடக்குது. நாளைக்கு இதே நேரத்தில் நான் ஸ்கைப்பில் வந்து உங்களிடம் பேசறேன். இப்போது நான் தொழுகைக்குப் போகணும். நாளைக்கு சந்திப்போம்.

உமர்:  தம்பி, தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிடாதே, அது உடலுக்கு நல்லது.  உன்னுடைய அடுத்த அற்புதத்தைக் காண நான் ஆவலோடு காத்திருப்பேன், நாளைக்கு சந்திப்போம்.

மூலம்: http://isakoran.blogspot.in/2014/06/2014-1.html

உமரின் ரமளான் கட்டுரைகள்