பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்

(கற்பனை நாடகம் : முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல்)

இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் அரசர் ஆட்சி செய்யும் நாட்டில், அவரது அரச சபையில் இந்த நாடகம் நடக்கிறது. முஹம்மதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "கலிஃபா" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் நடப்பதாக நாம் கற்பனை செய்துள்ளோம்.  இயேசுவின் சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இஸ்லாமிய ஆட்சி நடக்கும் அந்த நாட்டில் இயேசுவின் சீடர்களாகிய பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுலடியார் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்கள். இந்த நாடகம் கற்பனைத் தான் ஆனால், அரசருக்கும், இயேசுவின் சீடருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்களில், குர்-ஆன் மற்றும் பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டி பேசப்படுகின்றது. முஸ்லிம்கள் சத்தியத்தை அறியவேண்டும், மெய்யான வழியை பின்பற்றவேண்டும் என்பதற்காக இந்த தொடர் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. 

அந்த இஸ்லாமிய அரசர் முதலாவது பேதுருவை அழைத்து பேசுகிறார், அதனை முதல் பாகத்தில் இங்கு சொடுக்கி படிக்கவும்.

பாகம் 2

[இஸ்லாமிய அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் கொண்டு வரப்படுகின்றார். பவுலடியாரிடம் இஸ்லாமிய அரசர் கேள்விகளை தொடுக்கிறார், இவர்கள் மத்தியிலே நடைப்பெற்ற சூடான உரையாடலை படியுங்கள்.]

அரசர்: பவுல் அவர்களே, உம்மை இஸ்லாமிய அரச சபைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

பவுல்: அரசர் வாழ்க, என்னை அன்புடன் வரவேற்றதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அரசருக்கு ஒரு கேள்வி: "எங்களை கைது செய்து, சிறைச்சாலையில் அடைத்து, குற்றவாளிகளை நடத்துவதைப் போல நடத்திவிட்டு, இப்போது அரச சபைக்கு அன்புடன் வரவேற்கிறேன் என்றுச் சொல்வது ஏற்புடையதாக இருக்கின்றதா அரசே?".

அரசர்: ம்ம்ம். . . உங்களுக்கு கொஞ்சம் வாய் நீளம் என்று கேள்விப்பட்டுள்ளேன், அது உண்மை என்பதை இப்போது அறிந்துக் கொண்டேன்.

பவுல்: உங்கள் மனது புண்படுத்தப்பட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும். ஆனால், “இஸ்லாம் ஆட்சி செய்யும் நாட்டில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கும், செய்யப்படும் செயல்களுக்கும்” இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதினால் தான் நான் கேள்வி கேட்டேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்பதை நான் அறிந்துக்கொள்ளலாமா?

அரசர்:  நேற்று நான் பேதுருவிடம் பேசினேன். உங்களிடம் கூட சில கேள்விகளைக் கேட்கலாம் என்று எண்ணி இன்று உங்களை அழைத்தேன்.

பவுல்: ஒரு இஸ்லாமிய அரசருக்கு முன்பாக இயேசுவின் நற்செய்தியைக் குறித்து பேச எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக, நான் கர்த்தரை துதிக்கிறேன். என்னை அழைத்த உங்களுக்கும் என் நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசர்:  நீங்கள் நான்கு பேரும் என் நாட்டில் அதாவது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில் எதற்காக வந்தீர்கள்?

பவுல்: உலக இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உங்களுடைய நாட்டில் வாழும் மக்களுக்குச் சொல்ல நாங்கள் வந்தோம்.

அரசர்: எங்கள் இஸ்லாமிய நாட்டில் உங்கள் நற்செய்தியைச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

பவுல்: இயேசு எங்களுக்கு கட்டளை கொடுத்துள்ளார். அவரது கட்டளையின் பேரில் நாங்கள் உலகமெங்கும் அவரது நற்செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறோம். 

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று இயேசு கட்டளையிட்டுள்ளார் (மத்தேயு 28: 18-20).

அரசர்:  பவுல் அவர்களே, உங்களிடம் இயேசு அந்த கட்டளையைக் கொடுத்தாரா? நீங்கள் அவரை பார்த்தீர்களா? இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராக நீங்கள் இருந்தீர்களா? எனக்கு தெரிந்த வரை நீங்கள் இயேசுவை சந்திக்கவே இல்லை என்பது தானே உண்மை.

பவுல்: அரசே, நான் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவனல்ல. ஆனால் நான் இயேசுவை சந்தித்து இருக்கிறேன். இயேசுவின் சீடர்களையும் நான் சந்தித்து இருக்கிறேன், அவரது தாயாரையும் சந்தித்து பேசும் பாக்கியத்தையும் நான் பெற்றுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் எப்படி இயேசுவை சந்தித்தேன் என்பதை உங்களுக்கு விவரிக்கிறேன். ஆரம்பத்தில் நான் இந்த கிறிஸ்தவ மார்க்கத்தாரை வெறுத்தேன். 

நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். . . . நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப் போனேன். அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 

அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.  என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப் போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன். 

அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன், என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய் என்றான். [அப்போஸ்தலர் 22:4-15]

இப்படித்தான் நான் இயேசுவை சந்தித்தேன்.

அரசர்: அருமையான கற்பனை!  பவுலடியாரே உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகம் என்பதை நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சொல்லும் இந்த  கற்பனைக் கதையை நான் எப்படி நம்புவது? நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர் என்பதற்கு என்ன ஆதாரம்?

[அரசர் சரியான கேள்வியை கேட்டுவிட்டார் என்றுச் சொல்லி, அந்த சபையிலிருந்த மக்கள் எல்லோரும் தலையை அசைத்து, தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறார்கள்]

பவுல்: அரசே! நானும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்.

அரசர்: நான் கோபம் கொள்ளமாட்டேன், நீங்கள் எந்த கேள்வியையானாலும் கேட்கலாம். 

பவுல்: முஹம்மது யார்?

அரசர்: அவர் இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசி ஆவார்.

பவுல்:  உங்களுக்கு எப்படித் தெரியும்? 

அரசர்: அவரே எங்களுக்குச் சொன்னார். முஹம்மது (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். "அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." . . .  (ஸஹீஹ் புகாரி எண் 3).

ஜிப்ராயீல் தூதனை மேற்கண்ட விதமாக எங்கள் இறைத்தூதர் சந்தித்தார், அப்போது தான் அவர் குர்-ஆனின் முதல் வசனத்தைப் பெற்றார்.

பவுல்:  முஹம்மது அவர்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?

அரசர்: ஆம், நிச்சயமாக நம்புகிறேன்.

பவுல்:  அரசே! முஹம்மது அவர்கள் சொன்ன இந்த கதையை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? முஹம்மது அவர்கள் சொல்வது ஒரு கற்பனைக் கதையாகக் கூட இருக்கலாம் அல்லவா?  அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?

அரசர்: இல்லை இல்லை, அவர் சொன்னது உண்மை தான்.

பவுல்:  அதைத் தான் நான் கேட்கிறேன், அவர் சொன்னது உண்மைத் தான் என்பதை எப்படி நாம் கண்டுபிடிப்பது? இயேசு என்னை சந்தித்தார் என்பதை நம்ப மறுக்கும் நீங்கள், எப்படி முஹம்மது சொன்னதை மட்டும் நம்புகிறீர்கள்?

ஒரு முறை நான் இயேசுவை சந்தித்ததை நம்ப மறுக்கும் நீங்கள், 100க்கும் அதிகமான முறை காபிரியேல் தூதன் வந்து முஹம்மதுவிற்கு வசனங்களை கொடுத்தார் என்பதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள்? இது இரட்டை வேடம் போடுவதாகுமல்லவா?

அரசர்: அவர் இறைத்தூதர், ஆகையால் அவரை நாங்கள் நம்புகிறோம்.

பவுல்:  அவர் இறைத்தூதர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பொய் கூட சொல்லியிருக்கலாம் அல்லவா?

அரசர்:  எங்கள் இறைவேதம் குர்-ஆன் தான் “அவரை இறைத்தூதர்” என்றுச் சொல்கிறது, இது போதாதா நாம் நம்புவதற்கு?

பவுல்: குர்-ஆன் இறைவேதம் என்று  யார் சொன்னார்கள்? தான் சொன்ன வசனங்கள் இறைவன் கொடுத்த வசனங்கள் என்று யார் சொன்னார்கள்?

அரசர்: எங்கள் முஹம்மது (ஸல்) தான் சொன்னார்.

பவுல்: குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி, முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி. இது எப்படி உண்மையாக இருக்கும்? மெய்யான இறைவன் தான் குர்-ஆனை கொடுத்தார் என்றும், அதே இறைவனுடைய தீர்க்கதரிசி தான் முஹம்மது என்பதற்கு ஏதாவது ஆதாரங்களை அல்லாஹ் கொடுத்துள்ளாரா?  முந்தைய தீர்க்கதரிசிகள் போல முஹம்மது ஏதாவது அற்புதங்கள் செய்தாரா?

அரசர்: குர்-ஆன் தான் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதம்.  

இயேசு உங்களை சந்தித்ததைப் பற்றி கேட்டால், காபிரியேல் தூதன் முஹம்மதுவை சந்தித்தது பற்றி கேள்வி கேட்பது சரியில்லையே!

பவுல்:  இவ்விரண்டும் வெவ்வேறானவை அல்லவே! காபிரியேல் தூதன் முஹம்மதுவை 100 முறைக்கும் அதிகமாக சந்திக்க முடியுமானால்! இயேசு ஏன் என்னை ஒரு முறை சந்திக்க முடியாது? 

இயேசு என்னை சந்தித்தது உண்மை, தம்முடைய சீடனாக என்னை மாற்றிக் கொண்டது உண்மை, அவருடைய நற்செய்தியை சுமந்துச் செல்லும் அப்போஸ்தலனாக மாற்றியது உண்மை. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? 

அரசர்: நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள்! நடக்க முடியாத நிகழ்ச்சி நடந்ததாக சொல்கிறீர்கள்? இது அசாத்தியம்.

பவுல்:  உங்கள் முஹம்மதுவும் நடக்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்ததாக, 23 ஆண்டுகள் சொல்லிக்கொண்டு இருந்தார்,  அவர் சொல்வதையெல்லாம் உண்மையென்றுச் சொல்லி, அனேகர் நம்பினார்கள்.  ஒரு முறையாவது, “முஹம்மது சொன்னது பொய்யாக இருந்திருந்தால் என்னவாகும்?” என்ற கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொண்டதுண்டா?   ஒரு வேளை காபிரியேல் தூதன் அல்லாமல், வேறு ஒரு தீய சக்தி முஹம்மதுவை சந்தித்து இருந்திருக்கலாம் அல்லவா?

[அரச சபையில் இருந்த மக்கள், எழுந்து நின்று ”நிறுத்து, நிறுத்து” என்று சத்தமிட்டனர், அரசரின் முகம் சிவந்துவிட்டது, கண்களில் கோபம் தென்பட்டது, அவர் தன் கைகளை அசைத்து அமருங்கள் என்று சைகை காட்டினார். சில நொடிகளில் அரச சபை அமைதியாயிற்று]

அரசர்: எங்கள் சபையில் வந்து எங்கள் இறைத்தூதர் பற்றி பேச உங்களுக்கு பயமில்லையா?

பவுல்:  அரசே! உண்மை பேசுபவன் ஏன் பயப்படவேண்டும்?

அரசர்: உங்களுக்கு திமிரு அதிகம் என்று நினைக்கிறேன்.

பவுல்:  ஆம், இயேசு மீது நான் வைத்திருக்கும் என் பக்திக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான்.

அரசர்: உங்களுக்கு, அதிக படிப்பு பைத்தியமாக்கியுள்ளது பவுலடியாரே!

பவுல்:  உங்களின் அறியாமை, உங்களை ஏமாற்றிவிட்டது அரசரே! 

[அரசருக்கு மறுபடியும் கோபம் வருகிறது… ஆனால் அதை கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்கிறார்]

அரசர்: நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உங்களை இப்போதே கொடுமையாக தண்டிக்கமுடியும், கொல்லவும் முடியும்?

பவுல்:  அரசே, கொலை செய்வதைத் தவிர உங்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்?

சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு சொல்லியுள்ளார். (லூக்கா 12:4,5)

எனவே, கிறிஸ்தவர்களை பயப்படை வைத்து ஏதாவது சாதித்து விடலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள் அரசரே!  கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் (பிலிப்பியர் 1:21)

அரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பைத் தருகிறேன், ஒரு சிறப்பான நன்மையை உங்களுக்குத் தருகிறேன், அதை ஏற்றுக்கொண்டால் பிழைப்பீர்கள், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், மரணம் நிச்சயம் என்பதை மட்டும் அறிந்துக் கொள்ளுங்கள்.

என் பேச்சைக் கேட்டு, நீங்கள் ஒரு முஸ்லிமாக மாறினால், உங்களுக்கு ஒரு  உயர்ந்த பதவியை என் அரச சபையில் தருவேன்.  மேலும் உங்களுக்கு பிடித்தமான நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம், நல்ல அழகான குடும்பத்தை அமைத்துக் கொள்ளலாம்.  இந்த நாட்டில் பணம் பதவி அதிகாரத்தோடு வாழலாம். உங்கள் முடிவை இப்போது சொல்லவேண்டாம், உங்கள் நண்பர்களோடு பேசி முடிவு எடுங்கள். 

பவுல்:  இதைப் பற்றியெல்லாம் முடிவு எடுக்க அவகாசம் தேவையில்லை இஸ்லாமிய நாட்டு அரசரே.  இயேசுவின் அன்பை விட்டு எங்களை பிரிக்க நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடையும். 

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,  உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:36-39).

உங்கள் இறைத்தூதர் உயிரோடு இருந்த காலத்தில், உயிருக்கு பயந்து முஸ்லிம்களானவர்கள் உண்டு, பண ஆசையினாலும், பதவி ஆசையினாலும் முஸ்லிம்களானவர்களும் உண்டு, அப்படியே கிறிஸ்தவர்களும் இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு.  

உங்கள் இஸ்லாமை விட்டுவிட்டு, உண்மை மார்க்கத்தை பின் பற்றும் படி உங்களை அழைக்கிறேன். முந்தைய தீர்க்கதரிசிகளின் வழியில் நடக்க வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன். முந்தைய வேதங்களின் வழியில் நடக்க வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.  கொலைகள், வன்முறைகள் போன்றவற்றை விட்டுவிட்டு, அன்புடன் வாழ உங்களை அழைக்கிறேன்.

அரசர்: நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்... என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு,  இப்போதே என்னை கிறிஸ்தவனாக மாற்றி, இங்கேயே எனக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிடுவீங்க போல இருக்கே!

பவுல்:  நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறைய மாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப் போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன் அரசரே (அப்போஸ்தலர் 26:29)

[அரசரின் கோபம்… உச்சக் கட்டத்தை அடைகிறது… ]

அரசர்: யாரங்கே! உடனே… இவரை அழைத்துச் செல்லுங்கள்… நாம் மறுபடியும் சொல்லும் வரை இவர்களை என் முன்னே கொண்டு வராதீர்கள்…. 

[மயான அமைதி அரச சபையை சூழ்கிறது. அரசர் பவுலடியாரை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். காவலாளிகள் பவுலடியாரை மறுபடியும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிறைச்சாலையில் பேதுரு, யோவான் மற்றும் லூக்கா ஜெபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பவுலடியாரைக் கண்டதும், என்ன நடந்தது என்று விசாரித்தார்கள், பவுலடியாரும் நடந்ததைச் சொல்கிறார். அனைவரும் முழங்கால் படியிட்டு, தங்கள் கைகளை வானத்துக்கு நேராக நீட்டி, ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள்…..]

அடுத்த பகுதியில், இந்த இஸ்லாமிய அரசர், இயேசுவின் அன்பான சீடனாகிய யோவானை அழைத்துப் பேசுகிறார்….

”முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள்” கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்