பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம்

The Issue of Eating Pork

கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவதைக் கண்டு அனேக இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மோசே சட்டத்தின் கீழ் வாழும் இஸ்ரவேல் மக்கள் எப்படி பன்றியைக் கண்டவுடன் தூரமாக ஒதுங்குகிறார்களோ, அது போல, இஸ்லாமியர்களும் பன்றியைக் கண்டதும் ஒதுங்குகிறார்கள். இன்று உலகில் வாழும் பல இலட்ச யூதர்கள் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுகிறார்கள். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டில் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது.

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. (லேவியராகமம் 11:7-8)

இதே போல தடை குர்‍ஆனிலும் உண்டு:

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;... (குர்‍ஆன் 2:173)

பன்றி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று இஸ்லாமில் உறுதியாக கட்டளையிடப்பட்டுள்ளதால், பன்றி மாமிசம் சாப்பிடுவது என்பது ஒரு "பரிசுத்தமில்லாத செயல்" அதாவது இறைவனுக்கு முன்பாக தகாத செயல் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்திற்காகத் தான், பரிசுத்த நபியாகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லி கொள்பவர்கள், பன்றி மாமிசம் சாப்பிடுவதை மிகப்பெரிய குற்றமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

மோசேயின் சட்டங்களை புரிந்துக்கொள்வதும், அந்த சட்டங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கத்தை புரிந்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும், பழைய ஏற்பாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாக உள்ளன, அவைகள்:

அறநெறி சட்டங்கள் (Moral Law)

மற்றும்

அரசாங்க, ஆரோக்கிய மத‌ சட்டங்களாகும் (Civil Law)

வாழ்க்கையின் முக்கியமான நன்னடத்தை சம்மந்தப்பட்ட விவரங்கள் அறநெறி சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த அறநெறி சட்டத்தின் முக்கிய நோக்கம், தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் தங்கள் உள்ளான பரிசுத்தத்தினால் மற்ற மக்களைவிட வேறுபட்டவர்களாக காணப்படவும், மற்றும் மனிதர்களுக்கும் தேவனுக்கும் முன்பாக பரிசுத்தமாக வாழுவதற்கும் கொடுக்கப்பட்டது. இந்த உயர்ந்த அறநெறி சட்டங்கள் இஸ்ரவேல் மக்களின் தரத்தை உயர்த்தவும், அவர்கள் தங்கள் பரிசுத்தத்தில் மற்ற மக்களுக்கு, வம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், "பத்து கட்டளைகளைச்" சொல்லலாம். ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கும் அதே நேரத்தில் தேவனுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை இந்த பத்து கட்டளைகள் சொல்கின்றன. இந்த சட்டங்கள் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மாற்றமடையாத நிலையான சட்டங்களாகும்.

சிவில் சட்டங்கள் என்றுச் சொல்லக்கூடிய "அரசாங்க, ஆரோக்கிய மத" சட்டங்கள் வித்தியாசமானவைகள். இந்த சட்டங்கள் ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சமுதாயத்தில் பின் பற்றவேண்டிய சட்டங்களாகும். இந்த சட்டங்கள் சூழ்நிலைகள் மாறும் போதும், நம் அருகிலுள்ள சமுதாயத்திற்கு ஏற்ற விதமாக பழக்கவழக்கங்களினால் மாறக்கூடியதாக உள்ளது. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் வெளிப்புற சுத்தம் பற்றியும், ஆரோக்கிய‌ம் ப‌ற்றியும், உண‌வுக‌ளைப் ப‌ற்றியும், உடைக‌ளைப் ப‌ற்றியும் ம‌ற்றும் ம‌த‌ ச‌ட‌ங்குக‌ளைப் ப‌ற்றியும் சொல்கின்ற‌ன‌. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ளின் முக்கிய‌ நோக்க‌ம், இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் வெளிப்புற‌ ப‌ரிசுத்த‌த்தின் அடிப்ப‌டையில் ம‌ற்ற‌ ச‌முதாய‌ங்க‌ளை விட‌ எப்ப‌டி வேறு பிரிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌தைக் காட்ட‌வேயாகும். இந்த‌ இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக, ஒரே மெய்யான தேவனை அவர்கள் தொழுதுக்கொள்வதால் உலகத்திலுள்ள மற்றவர்க‌ளின் பார்வையில் வித்தியாசமானவர்களாக காணப்படும்படி வாழவேண்டும். அதே நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள மற்ற சமுதாயத்தின் மூட பழக்கவழக்கங்களையும், விக்கிர ஆராதனையையும் பின் பற்றாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக இச்சட்டங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த‌ சிவில் சட்டங்களில் ஒன்று தான் "ப‌ன்றி மாமிசம் உண்ணக்கூடாது" என்ற‌ த‌டை க‌ட்டளையாகும். இஸ்ரவேலை சுற்றியிருந்த ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள் விக்கிரகங்களுக்கு ப‌ன்றியை ப‌லியிடுவ‌து அவர்களுக்கு ஆராதனை வழக்கமாக இருந்த‌து. இன்னும் அந்த‌ கால‌த்தில் அந்த‌ இட‌ங்க‌ளில் வாழும் ப‌ன்றிக‌ள், குப்பை கூள‌ங்க‌ளையும் இத‌ர‌ கழிவுக‌ளையும் திண்ப‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. இத‌னால், ப‌ன்றியின் மாமிசத்தை உட்கொள்ளுதல், அனேக கொடுமையான வியாதிகளைக் கொண்டுவந்து மொத்த சமுதாயத்தையும் தாக்குவதாக இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் இப்படிப்பட்ட பழங்குடி மற்றும் அவர்களின் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை காத்துக்கொண்டு தூரமாக இருக்கவேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தனக்கு பரிசுத்த ஜனங்கள் என்று தேவன் அவர்களை பிரித்தெடுத்து, மெய்யான ஒரே தேவனாகிய தன்னை தொழுதுக்கொள்ளவேண்டுமென்று, ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் தேவன் விரும்பினார். இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்கள், இதனை அவர்கள் தொடர்ந்து நியாபகத்தில் வைத்திருக்கவேண்டும். இதனை குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது:

(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்). (குர்‍ஆன் 38:45- 46)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (குர்‍ஆன் 2:47)

ஏன் இஸ்ரவேல் மக்கள் விசேஷித்தவர்கள்? எந்த நோக்கத்திற்காக தேவன் அவர்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்? இந்த தெரிந்தெடுத்த சமுதாயத்திலிருந்து தான் உலக இரட்சகர் மேசியாவாகிய‌ இயேசு வரவேண்டும், இவர் மனித இனத்தை காப்பாற்ற தன்னையே ஒப்புக்கொடுக்க தேவனிடமிருந்து வந்தவர். தேவனின் வார்த்தை மனிதனாக வந்தார், கன்னி மரியாளுக்கு மகனாக இயேசுவாக வந்தார். இந்த பரிசுத்தர் ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் வம்சமாகிய இஸ்ரவேல் வம்சத்தில் பிறக்கவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மற்றவர்களைவிட தனித்தன்மை வாய்ந்தவர்க்ளாக தனக்கு பரிசுத்த ஜனம் என்று தேவன் அழைத்து அவர்களை தெரிந்தெடுத்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே.

இயேசு இந்த‌ உல‌கில் ஊழிய‌ம் செய்த‌ கால‌த்தில், துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌, இஸ்ர‌வேல் ம‌க்க‌ளில் அனேக‌ர் கட்டளைகளின் நோக்க‌த்தை ம‌ற‌ந்த‌வ‌ர்களாக‌ வாழ்ந்துக்கொண்டு இருந்தார்க‌ள். இத‌ய‌த்தை சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌தைக் காட்டிலும், த‌ங்க‌ள் கைக‌ளை சுத்தமாக வைத்திருப்பதற்கே அதிக‌ முக்கிய‌த்தும் கொடுத்து வ‌ந்தார்க‌ள். அவர்கள் ந‌ன்னெறி ச‌ட்ட‌ங்க‌ளுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தைக் காட்டிலும், சிவில் ச‌ட்ட‌ங்களுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள். முக்கிய‌மாக‌ ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ள் இத‌ய‌த்தை பரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்கு ப‌திலாக‌, அனேக‌ சுத்திக‌ரிப்பு க‌ட்ட‌ளைக‌ளை உருவாக்கி அவைக‌ளை க‌டைபிடித்த‌ன‌ர், ம‌ற்றும் இவைக‌ளே முக்கிய‌மான‌வைக‌ள் என்றும் சொல்லிவ‌ந்த‌ன‌ர். இத‌ய‌த்தை ப‌ரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌து கொஞ்ச‌ம் க‌டினமே. இதனால், உண்மையான மார்க்கத்தை பின் பற்றுகிறவர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மத சடங்குகளாலும், மாய்மாலத்திலும் நிறைந்திருந்தது. மதத் தலைவர்களை வெளிப்புறமாக கண்டால், அவர்கள் தங்கள் ஜெபங்களை அடிக்கடி செய்கிறவர்களாகவும், தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பவர்களாகவும், மற்றும் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கண்டால், வெறுப்பிலும், பேராசையிலும், பொறாமையிலும் காமத்தால் நிறைந்ததாயும் இருந்தது. தன் பரிசுத்தம் பற்றி தானே புகழ்ந்துப் பேசி மனிதன் தேவனின் கட்டளைகளை அவமதித்தான்.

இந்த சிவில் சட்டத்தை மனிதன் தவறாக மாற்றியதால், தேவன் கொடுத்த தனக்கிருந்த அதிகாரத்தினால் இயேசு காரியத்தில் இறங்கினார். அந்த மக்களின் மாய்மால வாழ்க்கையை நீக்குவதற்காக எல்லா உணவுகளும் சுத்தமானவைகள் என்று அறிவித்தார், இதன் மூலம், உண்மையான பரிசுத்தம் என்பது உண்ணும் உணவினால் அல்ல, மனதில் ஏற்பட்டிருக்கும் பரிசுத்தமே உண்மையான பரிசுத்தம் என்பதை காட்டினார். இதன் காரணமாக, இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே, அனுமதிக்கப்பட்டதே. இயேசு சொன்னதாக குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:

"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; …." (குர்‍ஆன் 3:50)

பரிசுத்தம் பற்றி இயேசுவின் போதனையை புதிய ஏற்பாடு இவ்விதமாகச் சொல்கிறது:

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:18-23)

இந்த இடத்தில் ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது இயேசு இந்த உலகத்தில் வந்துவிட்டதினால், இஸ்ரவேல் மக்கள் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், இயேசு உலகத்தில் உள்ள‌ எல்லா நாடுகளையும், மக்களையும் தேவனுக்குள் ஒன்றாக்கியுள்ளார். எல்லா நாட்டு மக்களும் இனி தேவனின் நன்னெறி சட்டங்களை (Moral Laws) பின்பற்றி வாழ்ந்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களாக வாழமுடியும். இயேசுவின் மக்களாகிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதாலும், அவர்கள் அதிகமதிகமாய் பெருகுவதாலும் இனி எல்லா நாட்டு மக்களுக்கும், கலாச்சாரத்திற்கு ஏற்ற ஒரு பொதுவான சிவில் சட்டம் இனி தேவையில்லை. ஏனென்றால், உலக மக்களின் சூழ்நிலைகள் வேறு, கலாச்சாரங்கள் வேறு, வாழும் இடமும், சீதோஷ்ண நிலையும் வேறு. எனினும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய இயேசுவின் நன்னெறி போதனைகள் மாறாமல் அப்படியே உள்ளது. அது என்னவென்றால், நாம் உணவை தவிர்ப்பதினால் சர்வ வல்லவருக்கு மகிமை உண்டாக்கப்போவதில்லை, ஆனால், தேவனுக்காகவும், தன் சக மனிதனுக்காகவும் இருதயத்தில் உண்டாகும் உண்மையான அன்பே, அதிக முக்கியமானது. இந்த சட்டமானது, எந்த நாட்டில் வாழ்பவனாக இருந்தாலும், உலகில் யாராக இருந்தாலும் சரி, அது அவனுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

இங்கு ஒன்றை நாம் குறிப்பிட‌வேண்டும், மோசேயின் சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றுள்ள‌ கிறிஸ்த‌வர்க‌ளில் அனேக‌ர் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌. இத‌னால், இஸ்ரவேல் ச‌முதாய‌ "சிவில் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு" கிறிஸ்தவர்கள் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆவார்கள்.

சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதாவது, தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள பன்றிகள் கழிவுகளையும், இதர குப்பை கூளங்களையும் சாப்பிட்டு வளருவதாக‌‌ கிறிஸ்தவர்கள் அறிய வந்தால், உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டவர்களாக‌, பன்றியின் மாமிசம் சாப்பிடாமல் இருக்கவேண்டும். நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் கூட‌ தேவனுக்கு பிரியமான செயலாக இருக்கிறது.

இஸ்ரவேல் அல்லாத அந்நிய ஜனங்களுக்கும் கட்டாயமாக‌ சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதை அப்போஸ்தலர் பேதுரு உணரவேண்டும் என்பதற்காக "குறிப்பிட்ட மிருக மாமிசத்தை உண்ணுங்கள்" என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளையை குறிப்பிட்டு, இயேசு ஒரு தரிசனத்தை பேதுருவிற்கு கொடுத்து அவரை அந்நிய ஜனங்களுக்கும் சுவிசேஷம் சொல்லும் படி தயார்படுத்தினார். அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தரிசனத்தின் மூலமாக பேதுரு தெரிந்துக்கொண்ட ஒரு தீர்மானத்தை 28ம் வசனத்தில் நாம் காணலாம்.

அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10

11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சியின் முக்கியத்துவம் "அந்நிய ஜனங்கள் (யூதரல்லாதவர்கள்) அசுத்தமானவர்கள் என்று இனி கருதவேண்டாம்" என்பதைச் சொல்வதற்காகவே ஆகும். இதன் படி "சுத்திகரிப்பு சடங்குகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள்" இனி அமுலில் இல்லை என்பதை காட்டவேயாகும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டில் யார் யாரெல்லாம் "அசுத்தமான தடை செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறாரோ" அவர் யூதர்களுக்கு அசுத்தமாக இருப்பார் என்ற கட்டளை இனி செல்லாது என்பதை தெரிவிக்கவேயாகும். ஆக, யூதர்களையும், யூதரல்லாதவர்களாகிய அந்நிய ஜனங்களையும் பிரித்துக்காட்டும் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்கள் இனி அமுலில் இருக்காது அல்லது செல்லுபடியாகாது, என்று தெரிவிக்க போதுருவிற்கு இயேசு தரிசனத்தைக் கொடுத்தார்.

இதன்படி, அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி, அப்போஸ்தலர்கள், அந்நிய ஜனங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களை "யூதர்களின் உணவு பற்றிய சட்டத்திட்டங்களிலிருந்து" விடுதலைக் கொடுத்தார்கள். இதே போல, 1 கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், எல்லா உணவுகளையும் நாம் உண்ணலாம், ஆனால், பலவீனமான சகோதரரின் விசுவாசத்தையும், மனசாட்சியையும் கருத்தில்கொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: The Issue of Eating Pork

இதர கேள்வி பதில்களை படிக்கவும்.